வெள்ளி, 13 மே, 2016

எழுதாத எண்ணங்கள்*

கருவிலிருக்கும்
பிறக்காத குழந்தையாய்
என் எழுதாத எண்ணங்கள்..

உள்ளத்தில் கருவாகி
நெஞ்சத்தில் உருவாகி
இன்னும் பிரசுவிக்கப்படாத
எழுத்துக்களாய் உறங்குகிறது..

இங்கே சில பிரசுவித்த
வார்த்தைகள்
ஊட்டமில்லா சவலைகளாய்
திணறுகையில் இன்னொன்றா?
கேள்வியில் ஊசலாடுகிறது
எண்ணங்களின் பிரசவம்..

தள்ளிப்போட்டு தள்ளிபோட்டு
நெஞ்சுமடியின் கனம்
கூடுகிறது..

வரவேற்க,
வாழ்த்துசொல்ல,
வாரியணைக்க
யாருமிலாது நிற்கையில்
ஏனிந்த கருத்தரிப்பு..

கிடக்கட்டும்..
வித்தாக மனதில் கிடக்கட்டும்...
வீரியம் கொண்டால் வெடித்து
விருட்சமாய் வளரட்டும்..

பதரென்றால்
மனதோடு மெல்ல மட்கி
இன்னொரு வித்துக்கு

உரமாகிப் போகட்டும்..

கருத்துகள் இல்லை: