புதன், 25 பிப்ரவரி, 2015

மதுவிலக்கு எனும் கண்மூடித்தனமான சித்தாந்தம்!


நன்றி: இ-விகடன்                                            வாசகர் பக்க கட்டுரை

து விலக்கு வந்தே தீர வேண்டும் என்ற கருத்து வலிவு பெறத் துவங்கியிருக்கிறது. கேரளாவில் மதுவிலக்குக்கான முனைப்புகள் துவங்கியிருக்கும் வேளையில், ஒரு முக்கியமான கேள்வி நமக்குள் எழுகிறது. மது விலக்கு சாத்தியம்தானா?.

அமெரிக்காவின் புகழ் பெற்ற ‘டைம்’ வார இதழ் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது. ‘சென்ற நூற்றாண்டின் 100 சிறந்த  மனிதர்கள்’, ‘100 சிறந்த பாடல்கள்’, ‘100 சிறந்த நாவல்கள்’ என்றெல்லாம் பட்டியல்களை வெளியிட்டது. அதில் ‘சென்ற நூற்றாண்டின் 100 மோசமான சித்தாந்தங்கள்’ என்பதும் அடக்கம். அதில் முதலிடம் பெற்று முன்னணி வகித்தது ‘மதுவிலக்கு’தான்.

அந்தக் கட்டுரையில் ‘சென்ற நூற்றாண்டில் உலகின் பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கை அமல் படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சில இஸ்லாமிய நாடுகளைத் தவிர எல்லா இடத்திலும் மதுவிலக்கு தோல்வியைத் தழுவியது. இஸ்லாமிய நாடுகளில் அது முடிந்ததற்கு காரணம் சமய ரீதியாக இஸ்லாம் மதுவுக்கு எதிராக இருக்கிறது என்பதும், அந்த நாடுகள் சர்வாதிகார ஆட்சியின் கீழ் நடந்தன என்பதும்,  குடிப்பவர்கள் மற்றும் விற்பவர்கள் நிறைய நேரம் மரண தண்டனையை சந்திக்க நேரிடும் என்பதும் முக்கிய காரணங்களாக இருந்தன.  ஆனால் இந்த மாதிரி எல்லாம் செய்ய இயலாத ஜனநாயக நாடுகள் எல்லாவற்றிலும் மதுவிலக்கு தோல்வியே கண்டிருக்கிறது“ எனக் குறிப்பிடப்பட்டது.

அமெரிக்காவிலேயே கூட 1920ல் துவங்கி 1933 வரை மதுவிலக்கு அமலில் இருந்தது. அப்போது கள்ளச் சாராயம் ஆறு போல் ஓடியிருக்கிறது. பெரிய பெரிய ஃப்ளாஸ்க்-களில் ரம் நிரப்பிக் கொண்டு கார் டிக்கி-யின் அடியில் ஒளித்து வைத்துக் கொண்டு உலவியிருக்கிறார்கள். மதுவிலக்கு அமெரிக்காவில் மாபெரும் தோல்வியடைந்தது. மொத்தமாக குடித்த சாராயத்தின் அளவு குறைந்திருந்தாலும், அதற்கு மக்கள் கொடுத்த விலை அதிகம். மதுவிலக்கு அமலில் இல்லாதபோது ஒரு தனி மனிதன் மதுவுக்கு 17 டாலர்கள் செலவழித்திருக்கிறான். அதே ஆள் மதுவிலக்கு அமலில் இருந்த காலத்தில் மதுவுக்கு செய்த செலவு 35 டாலர்கள். இது பணவீக்கத்தை கணக்கில் எடுக்காமல் வந்த புள்ளிவிபரம்.
ஒரு தனி மனிதன் கொடுத்ததை விட சமுதாயம் கொடுத்த விலை இன்னும் அதிகம். கருப்பு பொருளாதாரம் நாடு முழுதும் தழைத்தோங்கியது, தாதாக்கள் அவர்கள் கும்பல்களோடு எங்கெங்கும் உலவினார்கள். கள்ளச் சாராயக் கடைகள் மழைக் காளான்கள் போல முளைத்தன. அவற்றால் குற்றங்கள் பெருகின. பொதுவான அடிதடிக் குற்றங்கள் 12 சதவீதம் உயர்ந்தன. கொலை 12 சதவீதம், போதைப் பழக்கம் 44 சதம் என்று உயர்ந்தது. மதுவிலக்கால் காவல் துறைக்கு ஆன கூடுதல் செலவு 11%.

திருட்டுத் தனமாக விற்கப்பட்ட போலி சாராயம் விலை அதிகமானதால் சமுதாயம் செய்த கூடுதல் செலவு வருடத்துக்கு 3 பில்லியன் டாலர்கள். இந்த அளவுக்கான பணம் கருப்பு சந்தைக்கு கிடைத்ததால், கருப்பு பொருளாதாரம் நிறைய நேரம் வெள்ளைப் பொருளாதாரத்தை விட மேலோங்கி காணப்பட்டது. இத்தனைக்கான வரிப்பணம் அரசாங்கத்துக்கு கிடைக்காததால் கட்டுமான திட்டங்கள் தடைப்பட்டன.

மதுவிலக்கு நீக்கப்பட்டபோது அதனை முதலில் ஆதரித்த அதிபர் ராக்ஃபெல்லர் ஜூனியர், ‘மதுவிலக்கு கொண்டு வந்தால் அதற்கு மக்களின் பேராதரவு இருக்கும் என்று நினைத்தேன். கூடிய விரைவில் மது எனும் அரக்கனின் பிடியில் இருந்து சமுதாயம் விடுபட்டு விடும் என்று நம்பினேன். இப்போது பெரும் தயக்கத்துடன் இந்த நோக்கம் தோல்வியடைந்து விட்டது என்று ஒப்புக்கொள்கிறேன்.
நான் நினைத்ததற்கு மாறாக குடிப்பது அதிகரித்து விட்டது, திருட்டு பார்கள் அதிகரித்து விட்டன. குற்றம் செய்ய சிறு கும்பல்கள் இருந்தது போய் ஒரு ராணுவம் அளவுக்கு குற்றவாளிகள், போக்கிரிகள்  அதிகரித்து விட்டார்கள். சட்டத்துக்கு இருந்த மதிப்பே காணாமல் போய் விட்டது. இதற்கு முன்னே எப்போதும் இருந்திராத வகையில் குற்றங்கள் அதிகரித்து விட்டன"  என்று கூறியிருந்தார்.

ஆந்திராவில் மதுவிலக்கின்போது குடிமகன்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை. விருப்பமான ப்ராண்ட் கிடைக்காது அவ்வளவுதான். நிறைய கள்ளச் சாராய சாவுகள், உபாதைகள் நிகழ்ந்து கொண்டு வேறு இருந்தன. எனக்குத் தெரிந்த ஒருவர் கொஞ்சம் வசதி படைத்தவர். அவர் வீட்டின் அலமாரியில் முழுக்க முழுக்க பாட்டில்களை நிரப்பி வைத்திருந்தார். பியரோ, ரம்மோ, விஸ்கியோ எப்போதுமே அவர் வீட்டில் தட்டுப்பாடு வந்து நான் பார்த்ததில்லை. பணம் படைத்தவன் அலமாரி முழுக்க நிரப்பிக் கொள்ள,  ஏழை கள்ளச் சாராயம் குடித்து கண்களை இழந்து கொண்டு இருந்தான்.

இந்தியா மாதிரி பிராந்திய அமைப்பு கொண்ட நாடுகளில் தேசம் முழுக்க மதுவிலக்கு கொண்டு வரவே முடியாது. அப்போது ஒரு மாநிலம் இல்லாவிட்டால் பக்கத்து மாநிலத்தில் இருந்து மது கடத்துவது எளிதாகிவிடுகிறது. நம்மால் ‘செக் போஸ்டில் இருக்கும் போலீஸ்காரர்களை யாராலும் விலைக்கு வாங்க முடியாது. அவர்கள் எல்லாரும் நேர்மைக்கு பெயர் போனவர்கள்,’ என்று யாராவது சொல்ல முடியுமா? ஆகவே மதுவிலக்கு என்றால் அரசாங்கத்துக்கு வர வேண்டிய பணம் தாதா/ரவுடி கும்பல்களுக்கு போகப் போகிறது என்றுதான் அர்த்தம். மற்றபடி குடிப்பவர்கள் குடித்துக் கொண்டே இருக்கப் போகிறார்கள். அதற்காக அவர்கள் செலவழிக்கும் பணம் கூடப் போகிறது. குடிக்காக அவர்கள் கொடுக்கும் உடல்-உபாதை ரீதியான விலையும் கூடப் போகிறது. குடித்து குடித்து ஒரு ஐந்து ஆண்டுகளில் கெட வேண்டிய குடல் அடுத்த நாள் காலையிலேயே கிழியப் போகிறது. கூடவே கண்கள் போகப் போகிறது. அதுதான் மதுவிலக்கால் நாம் காண இருக்கும் பலன்.

மதுவை எதிர்ப்பவர்கள் வைக்கும் ஒரு முக்கிய வாதம் ‘மது இந்தியக் கலாச்சாரத்திலேயே இல்லை,’ என்பது. மது என்பது இந்தியா மட்டுமல்ல மனித நாகரீகத்துக்கே அடிப்படை. உலகிலேயே மெசபடோமியா பகுதியில்தான் (இன்றைய ஈராக், ஈரான் பகுதி) மனிதன் முதன் முதலில் விவசாயம் பண்ண ஆரம்பித்தான். முதன் முதலில் பயிரிடப்பட்ட தானியம் பார்லி. ஆவணப் படம் ஒன்றில் பார்லி விவசாயம் பண்ண வேண்டிய தேவை இருந்ததே அந்தக் கால மனிதர்கள் பியரை தயாரிக்க செய்த வேலைதான் என்று கூறுகிறார்கள். அதாவது ‘பியர் கண்டிப்பாக தேவை’ என்று மட்டும் ஆதி மனிதன் நினைக்காமல் இருந்திருந்தால் விவசாயம் என்ற ஒன்று வந்திருக்கும் சாத்தியக் கூறுகள் கம்மி என்று ஆராய்ச்சியாளர்கள் வாதிடுகிறார்கள்.
இப்போது இந்திய வரலாற்றைப் பார்ப்போம். மைக்கேல் உட் என்னும் ஆங்கில  வரலாற்றறிஞர்,  Story of India-வில், சோமபானம் என்னும் வேதகால பானத்தை தேடி அலைந்து கடைசியில், பாகிஸ்தானில் ஒரு கிராமத்தில் அந்தச் செடியை கண்டுபிடித்திருக்கிறார். அதில் இருந்து சோமபானம் வேறு தயாரித்து குடித்து ‘கிக்’ எப்படி இருக்கிறது என்றும் பரிசோதனை பண்ணி விளக்கியிருக்கிறார். வெண்டி டொனிகர் என்னும் சமஸ்கிருத ஆராய்ச்சியாளர் On Hinduism எனும்  புத்தகத்தில் எப்படி வித விதமான போதை உட்கொண்டு வேதகால மக்கள் உலகின் துவக்கம், கடவுளர்களின் தோற்றம் பற்றிய மாயத் தோற்றங்களை  (hallucinations) கண்டார்கள் என்று ஆராய்கிறார்.

இதே தமிழ் வரலாற்றை எடுத்துக் கொண்டால், மீனா கந்தசாமி ஒரு கட்டுரையில், "தமிழர்கள் அத்தி மரத்தின் வேரை வைத்து கள் உருவாக்கி இருக்கிறார்கள். உசில மரத்தின் கிளைகளில் இருந்து கள் எடுத்திருக்கிறார்கள். மேலும் இலுப்பைப் பூ, பனை மரம், அரச மரம், தென்னை மரம், ஏன் நெல்லில் இருந்து கூட கள் எடுத்ததற்கு இலக்கிய ஆவணங்கள் இருக்கின்றன. தமிழர்களாகிய நாம் மிகவும் பதப்படுத்தப்பட்ட கள்ளைத்தான் விரும்பி அருந்தியிருக்கிறோம். குடிக்கும் போது முகம் கோண வேண்டிய அளவு புளிக்க வேண்டும். கரும்பில் இருந்து செய்யப்படும் சாராயம் ‘மட்டு’ என வழங்கப்பட்டது, அது பாலியல் ஆசையை அதிகரிக்கும் என்று நம்பப் பட்டது. ‘உண்டட்டு’ எனும் இன்னொரு சாராயம் குடித்தால் கண்டிப்பாக ஆட்டம் ஆட வேண்டும் என்பது சம்பிரதாயம். மது விற்கும் பெண் ‘படுவி’ என்று வழங்கப் பட்டார்" என்று எழுதுகிறார்.

இதில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது. மதுவுக்கும், தமிழ்க் கலாச்சாரத்திற்கும் உறவு தமிழ் மொழி அளவுக்கு பழையது. இந்தியாவுக்கும் மதுவுக்கும் உள்ள உறவு வேதகாலத்துப் பழையது. அப்படியானால் மக்கள் குடித்து சாக வேண்டியதுதானா, மதுவுக்கு  அடிமையானவர்களுக்கு வேறு வழியே இல்லையா, என்றால், பதில் இருக்கிறது. குடிப்பவர்களில் இரண்டு வகை: சும்மா எப்போதாவது குடிப்பவர்கள். காலை எழுந்தவுடன் அன்றைய மதுத் தேவை பற்றி யோசிப்பவர்கள். இந்த இரண்டாமவர்கள்தான் போதைக்கு அடிமையானவர்கள். அவர்களுக்கு counselling, therapy, மற்றும் தேவைப்பட்டால் மருந்து மாத்திரைகள், என்றெல்லாம் தேவைப்படும். நல்ல சத்தான உணவு தேவைப்படும். இவற்றை எல்லாம் அரசாங்கம் இந்த மையங்களில் இலவசமாக அளிக்க வேண்டும்.

அரசாங்கம் ஆரம்ப சுகாதார நிலையங்களில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எல்லாம் போதை விடுதலை மையங்கள் (deaddiction centres) அமைக்க வேண்டும். இந்த விழிப்பு மையங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு டாஸ்மாக் அருகிலும் ஒரு டேபிள் சேர் வைத்துக் கொண்டு ஒரு போதை விழிப்பு ஆலோசகர்உட்கார்ந்து கொள்வது கூட நல்லது. அவருக்கான சம்பளத்தை அந்த டாஸ்மாக் லாபத்தில் இருந்தே அளிக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.

இப்போதைக்கு Deaddiction, Rehabilitation போன்ற விஷயங்கள் எல்லாம் நம் மக்களுக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு, அறவே தெரிவதில்லை. உண்மையாகவே குடியை விட்டொழிக்க நினைப்பவர்களால் கூட அதை எப்படி செய்வதென்று தெரிவதில்லை. ஒரு நாள், ரெண்டு நாள் முயன்று திரும்பி அதில் விழுந்து போகிறார்கள். இதனால் அவர்களின் சுயமரியாதை வேறு பாதிப்புக்குள்ளாகி தங்களைத் தாங்களே கேவலமாக நினைத்துக் கொள்ளும் அவல நிலைக்கு வேறு போகிறார்கள்.
 இது தவிர நிறையப் பேர் குடித்து விட்டு சண்டை போடுவதற்கோ, வீட்டில் பொண்டாட்டி, பிள்ளைகளை அடிப்பதற்கோ உளவியல் ரீதியிலான நிறைய பிரச்னைகள் காரணமாக இருக்கின்றன. Stress Disorders, Post-Traumatic Disorders, மற்றும் Clinical Depression போன்ற மன உபாதைகளால் பாதிக்கப் பட்டவர்கள் குடியில் அடைக்கலம் நாடுகிறார்கள். இந்த மாதிரி மன-நலப் பாதிப்புகள் இருப்பதே நம்மில் நிறைய பேருக்கு, குறிப்பாக விளிம்பு நிலை மக்களுக்கு தெரியாது. அந்தப் பிரச்னைகளை கண்டறிந்து தெரபி, கவுன்சிலிங் போன்றவை வழங்கினாலே அவர்கள் இதில் இருந்து விடுபடலாம்.

வயிற்று வலியால் துடிக்கிற ஒருவன், அதற்கு தீர்வாக வலி மாத்திரை தொடர்ந்து சாப்பிட்டு வருகிறான். அது அவனுக்கு கொஞ்சம் ஆறுதல் தருகிறது. ஆனால் அந்த வலி மாத்திரை அவன் கிட்னியை தொடர்ந்து பாதித்துக் கொண்டே இருக்கிறது. அவன் வலிக்கான  காரணம் அறிந்து அதற்கு சிகிச்சை செய்ய வேண்டும். அதை விட்டு ‘அந்த மாத்திரை உன் கிட்னிக்கு பாதிப்பு,‘ என்று அவனிடம் இருந்து அதை பிடுங்கி விட்டால் என்ன ஆகும்? எப்படியாவது அந்த மாத்திரையை அடைவதற்கு அவன் முயல்வான். கூடவே வலியால் துடித்துப் போவான்.

தமிழ் நாட்டில் மதுவிலக்கு என்பது, வயிற்று வலியை தீர்க்காமல் வலி மாத்திரையை பிடுங்குவது போலதான். அது கொடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். நல்ல சாராயத்துக்கு செலவிட்டதில் இருமடங்கை கள்ள சாராயத்துக்கு செலவிட வேண்டிய அவலம் ஏற்படும். நிறைய கண்கள் பார்வை இழக்கும். நிறைய தாதா கும்பல்கள் புதிதாகப் பிறக்கும். நிறைய பணக்கார வீடுகளின் அலமாரிகள் பாட்டில்களால் நிறைந்து வழியும்.
இதுதான் மதுவிலக்கு எனும் சித்தாந்தம் ஏற்படுத்தப் போகும் விளைவு. அதற்கு தமிழ்நாடு தயாரா?
- ஸ்ரீதர் சுப்ரமணியம், (சென்னை)

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

சாதி ஒழி..மதம் அழி... சாதி....

வா மனிதா..... 
வானேறி வையத்தை ஆளும் வேளையிலே 
சாதிக்கும் மதத்திற்கும் சண்டை எதற்கு...? 
நாம் சாதிக்கா பிறந்தோம்...? 
இல்லை..சாதிக்க அல்லவோ...! 
மதமென்னும் போதையிலே மானுடத்தை புதைக்கிறோமே..! 
வகுப்பறையில் பிரிக்காத சாதி மதம் – நம்மை 
வெளியுலகில் பீடித்த மாயமென்ன....? 
ஆழியிலே வந்த பேரலைகள் உன் சாதி உன் மதம் 
என பிரித்தா அள்ளியது இன்னுயிரை... 
நட்போடு கைகோர்த்து நடைபோடு 
பிரிவினையில் சண்டையிட வெட்கப்படு 
அன்(பு)பூ மலரும் மனத்தோட்டத்திலே 
சாதிமத முட்களை வெட்டி எருவாக்கு... 
எழுச்சியோடு வா நண்பா... 
சாதிக்கு சாவுமணி அடித்து – அதை 
மதத்தின் மரணக்குழியில் புதைத்திடுவோம்.. 
நினைவில் வைப்போம் நண்பா – நாம் 
சாதிக்குப் பிறக்கவில்லை - சாதிக்கவே... 
மதத்திற்கு பிறக்கவில்லை – மானுடத்திற்கே... 
சாதி ஒழி..மதம் அழி... சாதி.... 

இப்படி நாம் காதலிப்போம்

அன்பெனும் யாழினை மீட்டி வரும்.. 
வள்ளுவன் வார்த்தையின் உயிர்வரியே.. 
காணிநிலத் தோட்டத்திலே 
அந்த மீசைக்கவியின் பாடலுடன் 
மோகத்தை வென்றிட காதலிப்போம்... 
வண்ணமலர் கொஞ்சும் சோலையிலே.. 
கள்ளுண்ட வண்டினைப் போல் காதலிப்போம்.. 
சாதிகளற்ற ஓருலகம் நம் சந்ததி படைத்திடுவே 
அன்பெனும் சமயத்தை வார்த்தெடுத்து – அந்த 
மதத்தின் முகத்திரை பிய்த்திடுவோம்.... 
வேற்றுமை கொன்று மனதாலே 
ஓருயிராய் வாழ காதலிப்போம்.... 
கம்பனும் கவிகாளியும் காணாத – ஒரு 
காதலை கண்டிட காதலிப்போம்... 
இன்றைய இணைய உலகத்திலே கூகுளில் தேடக் 
கிடைக்காத ஒரு காதலை கண்டிட காதலிப்போம்... 
கற்கால உலகம்போய் கணினி உலகம் இப்போதும்.. 
வரும் மெய்நிகர் உலகிலும் வாழ்ந்திடும் – ஓர் 
காதலை படைக்க வா...காதலிப்போம்.. 
தூதிலே வந்த காதலைக் கண்ட நாம் 
வாட்ஸ்அப் கொண்டும் காதலிப்போம்.. 
இப்படி நாம் காதலிப்போம் – ஆனால் 
அன்பினாலே காதலிப்போம். 

ஆளுமைத் திறன் - உங்கள் குழந்தைக்குக் கற்றுத்தரும் உத்திகள்!பண நிர்வாகம்...



குழந்தைகளுக்குக் கஷ்டம் தராமல் உலகமே புரியாமல் வளர்த்தது அந்தக் காலம். வாழ்க்கையின் சவால்களைச் சமாளிக்கத் தெரிந்த சாமர்த்தியசாலிகளாகக் குழந்தைகளை வளர்ப்பதே இந்தக் காலம்!
வெங்கட்டுக்கு இப்போது நாற்பது வயது. நல்ல உத்தியோகம், கைநிறையச் சம்பளம். ஆனாலும், நாளுக்குநாள் ஏறிக்கொண்டே போகும் விலைவாசியில் திண்டாட்டமாகத்தான் இருக்கிறது. வீட்டு லோன், கார் லோன், பர்சனல் லோன் என்று கடன் கட்டி மாளவில்லை. எவ்வளவோ திட்டமிட்டுச் செலவு செய்தாலும் மாத கடைசியில் கஷ்டம்தான்.
வாழ்க்கை ஏன் இப்படியே போகிறது? விலை ஏற்றம்தான் காரணமா? அல்லது பணத்தை நிர்வாகம் பண்ணுவதில் நமக்குத்தான் கொஞ்சம் சூட்டிகைப் போதவில்லையோ? கார் வாங்குவதைக் கொஞ்சம் தள்ளிப்போட்டு இருக்கலாமோ? எல்லாரும் வாங்குகிறார்களே என்று வாங்கியது தப்போ? பர்சனல் லோன் வாங்காமல் சமாளித்திருக்கவேண்டும். இப்படி மனதில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள். சரியான நேரத்தில் எடுத்துச்சொல்ல யாரும் இல்லாததால் நேர்ந்த தவறுகள்.
இந்தக் கஷ்டங்கள் வருங்காலத்தில் நம் பிள்ளைகளுக்கு வரக்கூடாது. சிறு வயதில் இருந்தே அவர்களுக்குப் பணத்தைக் கையாளுவதில் நல்ல விழிப்பு உணர்ச்சியை உண்டாக்கவேண்டும். வாழ்க்கைக்குப் பணம் எவ்வளவு முக்கியமானதோ, அவ்வளவு முக்கியமானது அதனைச் சரியாக நிர்வாகம் செய்வது என்பதைப் புரியவைக்க வேண்டும் என்று நினைத்தார்.

பண நிர்வாகத்தில் உள்ள சூட்சுமங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லித்தர என்ன செய்யலாம்? மூளையைக் கசக்கிக்கொண்டு யோசித்தவர், முதலில் கடைக்கு ஓடிப்போய் ஓர் உண்டியலை வாங்கி வந்து தன் குழந்தைகளிடம் கொடுத்தார்
ஆனால், அது மட்டும் போதுமா? சேமிக்கச் சொல்லித் தருவது நல்ல பழக்கம்தான். உண்டியலை மட்டும் வைத்துக்கொண்டு குழந்தைகள் பணத்தை நிர்வகிக்கக் கற்றுக்கொள்ள முடியுமா என்ன என்கிறீர்களா? வேறு என்னவெல்லாம் வழிகள் இருக்கின்றன என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறீர்களா?

முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், பண நிர்வாகம் என்பது ஒரு நாளில் கற்றுக்கொள்ளக்கூடிய சமாசாரம் இல்லை என்பதுதான். வெறும் உண்டியலை வாங்கித் தருவதாலோ அல்லது ஒருமுறை சொல்வதினாலோ பணத்தை நிர்வகிப்பதில் உள்ள நுணுக்கங்களை ஒருவர் முழுமையாக உள்வாங்கிவிட முடியாது. இது வாழ்நாள் முழுவதும் தொடரவேண்டிய‌ கல்வி. குழந்தையில் ஆரம்பித்து டீன்-ஏஜ் ஆகி பெரியவர் ஆகும் வரை தொடர்ச்சியாகப் பயில வேண்டிய விஷயம்.

பண நிர்வாகம் என்கிற விஷயத்தைப் பொறுத்தவரை, குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்பதைவிடவும், நம்மைக் கவனித்துக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாக நாம் வாழ்ந்து காட்டினாலேபோதும், பண நிர்வாகத்தில் எதிர்காலத்தில் மிகச் சிறந்து விளங்குவார்கள்.

குழந்தைகள் எல்லோரும் ஒரே சிந்தனைப்போக்குக் கொண்டவர்கள் கிடையாது. வயதுக்கேற்ப உலகம் பற்றிய அவர்களின் பார்வை மாறும். பணத்தைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். எனவே, குழந்தைகளின் வயதுக்கேற்ப ஒவ்வொரு கட்டத்திலும் என்ன வழிமுறைகளைப் பயன்படுத்தி அவர்களுக்குப் பண நிர்வாகம் பற்றிச் சொல்லித் தரலாம் என்பதை இனி விளக்கமாகச் சொல்கிறேன்.

6 - 10 வயது வரை: சேமிக்கப் பழக்குங்கள்!

இந்த வயது குழந்தைகளுக்கு முதலில் அடிப்படை விஷயமான சேமிப்பைப் பழக்கினாலே போதும். பெற்றோர்கள் தங்களுக்குத் தருகிற பணத்தில் பாதியை சேமித்துவிட்டு, மீதியைத்தான் செலவழிக்க வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்துங்கள். அதாவது, ரூ.10 தந்தால், அதில் ரூ.5 சேமிப்புக்கு, மீதி ரூ.5தான் செலவுக்கு என்று பழக்குங்கள்.

இதனால் என்ன லாபம்? கையில் வரும் காசு எல்லாமே செலவழிக்கத் தான் என்ற எண்ணம் சிறு வயதில் இருந்தே தோன்றாது. முதல்பகுதி சேமிப்புக்கு, அடுத்த பகுதிதான் செலவுக்கு என்று மனதில் படிந்துவிடும். 'Pay yourself first’ என்று சொல்வார்கள். முதலில் உங்கள் எதிர்காலத்துக்கு வேண்டிய பணத்தை எடுத்துவைத்துவிடுங்கள் என்று இதைத் தமிழில் சொல்லலாம். இந்தப் பழக்கம் குழந்தைகளின் அடிமனதில் பதிந்துவிட்டால் பெரியவர்களாகி வேலைக்குப் போன பின்னால் தீபாவளி போனஸ், இன்க்ரிமென்ட் என்று ஒரு தொகை கிடைக்கும்போதெல்லாம் முதலில் சேமிப்பில் சேர்த்துவிடுவார்கள்.
இலக்கு அவசியம்!

வெறும் சேமிப்பு என்கிற கட்டத்தைத் தாண்டியபிறகு, அதாவது, சேமிக்கத் தொடங்கிய ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு குறிப்பிட்ட இலக்கை வைத்து சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். 100 ரூபாய் சேமித்தால் பொம்மை வாங்கலாம்; 500 ரூபாய் சேமித்தால் செஸ்போர்டு வாங்கலாம் என்று இலக்கு நிர்ணயிக்கலாம்.

நீங்கள் நிர்ணயிக்கும் இலக்கை உண்டியல்மேல் எழுதி ஒட்டிவிடுங்கள். அப்போதுதான் ஓர் இலக்கை நோக்கிப் பயணிக்கிறேன் என்பதைக் குழந்தைகள் மறக்காமல் இருப்பார்கள். அந்த இலக்கை அடைந்தவுடன் அந்தப் பொருளை வாங்க உதவி செய்யுங்கள். கஷ்டப்பட்டதற்குப் பலன் கைமேல் தெரிந்தால்தான் குழந்தைகள் பெரிய இலக்குகளை நோக்கி ஓடுவார்கள்.

சிலசமயம் அவர்கள் வாங்கிய பொம்மை உடைந்துவிடக்கூடும். அது நல்லதுக்குத்தான். கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தை எளிதில் உடைந்துவிடக்கூடிய பொருளை வாங்கிவிட்டோமே என்று நினைத்து, அடுத்தமுறை, இலக்குகளைச் சரியாக நிர்ணயம் செய்ய குழந்தைகளுக்கு அது உதவும். நீண்டகாலம் சந்தோஷம் தரும் விஷயத்துக்குப் செலவு செய்யவேண்டும் என்று புரிந்துகொள்வார்கள். இதனால் என்ன லாபம்? பெரியவர்களானதும் சொந்த வீடு உள்பட நீண்டகாலத்துக்கு நன்மை தரும் விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள்.

10 வயதுக்கு மேல்: வங்கிக் கணக்குத் தொடங்குங்கள்!

வங்கியில் குழந்தைபேரில் சேமிப்புக் கணக்குத் தொடங்குங்கள். உண்டியலில் சேமித்ததை வங்கியில் போட்டுவைக்கப் பழக்குங்கள். குழந்தையை வங்கிக்கு அழைத்துக் கொண்டு போவது, அவர்களின் கையாலேயே பணத்தை டெபாசிட் பண்ணுவது, பணத்தை எடுப்பது, செக் போடுவது போன்ற விஷயங்களைச் சொல்லிக்கொடுங்கள். இதனால் என்ன லாபம்?

* வங்கிகளில் சேமித்தால் லாபம் அதிகம். ஏனென்றால் வட்டி, கூட்டு வட்டி கிடைக்கும். உண்டியலில் சேமித்தால் இது கிடைக்காது என்பதைக் குழந்தைகள் புரிந்துகொள்வார்கள்.

* வங்கிகளில் நடப்பது என்ன, அங்குப் புழங்கும் டெக்னிக்கல் வார்த்தைகள் என்ன என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் அத்துபடியாகும், பயமும் விலகும்.

* தங்கள் சேமிப்புக்கு அதிக வட்டி எங்கே கிடைக்கும், வங்கிகளின் சேவை பற்றியெல்லாம் அலச கற்றுக்கொள்ள ஆரம்பிப்பார்கள்.

* தவறு நேர்ந்தால் எப்படிப் புகார் செய்வது என்று தெரிந்து கொள்வார்கள்.

* காலேஜ் போகும்போது கல்விக் கடன் வாங்கவேண்டி இருந்தால் தைரியமாகப் பேங்க் மேனேஜரிடம் பேசுவார்கள். அதன் லாபநஷ்டத்தைக் கணக்குப் போடத் தெரிந்துகொள்வார்கள்.

செலவுக் கணக்கு எழுதப் பழக்குங்கள்!

தினமும் செலவு விவரங்களை அப்பா, அம்மாவிடம் கேட்டு நோட்டில் எழுதிவைக்கப் பழக்குங்கள். இது அவர்கள் சேமிப்புக்கு மட்டுமல்ல, வீட்டுச் செலவுக்கும்தான். இதனால் என்ன லாபம்?
குழந்தைகளுக்கும் வீட்டின் வரவு, செலவுகள் எழுதுவது பிடிபட்டுவிடும். செலவுகளைப் பற்றித் துல்லியமாகத் தெரிந்தால்தான் பிற்காலத்தில் சரியாகப் பட்ஜெட் போட முடியும். பட்ஜெட் போட்டுச் செலவு செய்தால், பணம் எல்லாமே நம் கட்டுக்குள் இருக்கும். பெற்றோரின் சிரமம் புரியாமல் குழந்தைகள் எதாவது வாங்கித்தரச் சொல்வதும் குறையும்.

டீன்-ஏஜ் பிரிவினருக்கு: மினி பட்ஜெட் போட பழக்குங்கள்!

'அவனுக்கு என்ன தெரியும்? சின்னக் குழந்தை. அவன் படிப்புல கவனமா இருந்து நல்ல மார்க் வாங்கினாலே போதும்’ என்று தயவுசெய்து நினைக்காதீர்கள். கல்வி முக்கியம்; அதைவிட முக்கியம், வாழ்க்கைக் கல்வி என்கிற பண நிர்வாகம். இதற்கு ஒரு சின்ன ப்ராஜெக்டாக ஒரு மினி பட்ஜெட் போட பழக்குங்கள். திருப்பதி, பழநி ட்ரிப் அல்லது பர்த்டே பார்ட்டி போன்ற எல்லா நிகழ்ச்சிகளுக்கான செலவுக்கு உங்கள் டீனேஜ் மகன்/மகளை உட்கார வைத்துப் பட்ஜெட் போடுங்கள். என்னென்ன தலைப்புகள், எந்தெந்த விஷயங்களுக்குச் செலவு செய்யவேண்டும் என்று நோட்டில் எழுதச் சொல்லுங்கள். நோட்டில் எழுதி வைத்தால்தான் மனதில் பதியும். வெறும் மனக்கணக்கு போடுவது தப்புக் கணக்காகவே முடியும். பின்னர் எங்கெங்கே அசல் செலவு பட்ஜெட்டைத் தாண்டும் என்று கணிக்கச் சொல்லுங்கள்.

அந்தப் பயணம் முழுவதும் பிள்ளையின் கையில் நோட்டு இருந்து உடனுக்குடன் எழுதிக்கொண்டே வந்தால் நல்லது. எல்லாம் முடிந்தபின் ஏற்கெனவே போட்ட பட்ஜெட்டை குடும்பமாக அமர்ந்து அலசுங்கள். எங்கே செலவு அதிகமானது, ஏன் என்று அலசினால் அடுத்தமுறை இன்னும் கச்சிதமாகப் பட்ஜெட் போட முடியும்.
இதனால் என்ன லாபம்? பிற்காலத்தில் எதையும் திட்டமிட்டுச் செலவு செய்யப் பழகுவார்கள். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பட்ஜெட்டுக்குள் குடும்பம் நடத்தினால் ஒவ்வொரு இலக்காக விரைவில் அடையலாம். திடீர் பணவரவு வந்தால் தாம்தூம் என்று செலவழிக்க மாட்டார்கள்.

ஆய்வு செய்யப் பழக்குங்கள்!

டீன்- ஏஜ் மகன்/மகள் ரொம்ப நாளாக மொபைல் போன் வேண்டுமென்று நச்சரிக்கிறார்களா? என்ன மாடல் போன், எந்த நெட்வொர்க், என்ன ஸ்கீம், என்ன ஆஃபர் என்று விசாரித்து வரச் சொல்லுங்கள். அதைக் கச்சிதமாகச் செய்கிறார்களா என்பதைப் பாருங்கள்.

கோச்சிங் க்ளாஸில் சேரவேண்டுமா? அடிப்படை தகவல்களைத் திரட்டிவரப் பழக்குங்கள். கட்டணம் எவ்வளவு, ஆசிரியர்கள் தேர்ந்த பயிற்சியாளர்களா, வகுப்பறை எப்படி, லைட்டிங்க், பாத்ரூம் வசதிகள் எப்படி என்று விசாரிக்கச் சொல்லுங்கள்.

ஸ்போர்ட்ஸ் ஷூ வேண்டுமா? எங்கே டிஸ்கவுன்ட் சேல்? கம்ப்யூட்டர் வாங்கவேண்டுமா? என்ன மாடல், என்ன கான்ஃபிகரேஷன், என்ன விலை என்று கேட்கச் சொல்லுங்கள்.
ஒரு விஷயத்தைப் பற்றி ஆய்வு செய்வது என்பது ஏதோ கம்பச் சூத்திரமல்ல; அது பற்றிய அடிப்படையான எல்லா விஷயங்களை எல்லாம் அலசி ஆராய்வதுதான் ரிசர்ச். பணம் செலவு செய்யப்போகிறோம் என்றால் நாலு விஷயமும் விசாரிக்கவேண்டும்.

இதனால் என்ன லாபம்? ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்த்து, தகவல் திரட்டி, தீர்க்கமாக அலசி ஆராய்ந்து முடிவெடுப்பார்கள். பிற்காலத்தில் வீடு, கார், முதலீடு என்று எதையும் ஒன்றுக்கு பத்து தடவை அலசி ஆராய்ந்து வாங்குவார்கள். 'என்னாலே எல்லாம் நாலு கடை ஏறி இறங்க முடியாது. முதல் கடையிலேயே பர்ச்சேஸை முடிச்சிருவேன்' என்று சொல்லமாட்டார்கள். அடுத்தவர், கார் வாங்கினால் தானும் உடனே அதே மாடல் கார் வாங்கி வாசலில் நிறுத்துவேன் என்று வெட்டி பந்தா பண்ணாமல், நம் குடும்ப அங்கத்தினர் எண்ணிக்கைக்கு, நிதி நிலைமைக்கு ஏற்ற மாதிரி வாங்குவார்கள்.

குழந்தைகளுக்குக் கஷ்டம் தராமல் உலகமே புரியாமல் வளர்த்தது அந்தக் காலம். வாழ்க்கையின் சவால்களைச் சமாளிக்கத் தெரிந்த சாமர்த்தியசாலிகளாகக் குழந்தைகளை வளர்ப்பதே இந்தக் காலம்!
நீங்கள் இந்தக் காலத்துப் பெற்றோர்தானே? பண நிர்வாகம் பற்றி உங்கள் குழந்தைக்குக் கற்றுத் தருவீர்கள்தானே!


வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

பிள்ளைகளை வாழவைப்போம்..

இன்று ஒரு குடும்பத்தைச் சந்தித்தேன். அந்த பெரியவருக்கு 70 வயது இருக்கும். அவர் பிரபல கல்லூரியில் பேராசிரியராய் இருந்து ஓய்வு பெற்றவர். அவர் மனைவியும் அவ்வாறே. அவர் மகனைப் பற்றி விசாரித்தேன். அவர் ஒரு freelancer என்று சொன்னார். திருமணமாகி பள்ளி செல்லும் வயதில் பேத்தி.
வேறு பெரிய நகரத்தில் போய் வேலை செய்ய அவர் மகனை அனுப்ப அவர் விருப்படவில்லை. ரெண்டு பென்ஷன், அப்புறம் சேமிப்பு, அவ்வப்போது மகனுக்கு கிடைக்கும் வருமானம் போதும் என்றார். தாய் தகப்பன்கிட்டே இருந்தால் போதும். பெரிதாக சம்பாதிக்க எந்த ஊருக்கும் போகத் தேவையில்லை என்றார். மெச்சுகிறேன் அவரின் சுய திருப்தியை, ஆனால் ஒரு சிறு வருத்தத்துடன்.
அவர் பேசும் போது அவர் மகனின் முகமும் மருமகளின் முகமும் இறுக்கமாய் இருந்தது. அவர் அவருடைய வாழ்க்கையை மிக அற்புதமாக பெரிய படிப்பு படித்து, டெல்லி எல்லாம் சென்று பெரிய உத்தியோகம் பார்த்து நிறைவடைந்து அமைதி நாடி அமர்ந்துவிட்டார். ஆனால், அவரின் மகனுக்கு எந்த முன்னேற்றமும் எந்த கிரியேடிவிட்டியும் இல்லாத ஒரு வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறார். இந்த முப்பது வயதில் அவனும் சாதிக்க ஆசைப்படுவான் என்பது ஏன் இவர்களுக்கு புரியவில்லை. பணம் சம்பாதிக்க தேவையில்லாவிடினும் தனது மனதுக்கு பிடித்த வேலையை, புதிய முயற்சிகளைச் செய்யவிடாமல் அவனை முடக்குவது எந்த வகையில் நியாயம்?.
அருகில் இருந்தால் மட்டுமே பாசம் என்றும், தள்ளிப் போனால் மறந்துப்போயவிடுவான் என நினைப்பதும், அதற்காக அவர்களை தன் வீட்டுக்குள்ளேயே முடக்கி வைப்பதும் நிறைய குடும்பங்களில் நடக்கிறது. இந்த வகையில் முதியோர் இல்லங்களை தவிர்க்கலாம் என வயதில் மூத்தவர்கள் நினைக்கிறார்கள்.
நாம் நடமாடும் வரை இது எல்லாம் ஓகே. நாம் முடியாமல் படுக்கையில் விழுந்தால், இத்தனை வருடங்களாய் சேர்ந்திருக்கும் அவர்களின் கோபங்கள் அப்போதுதான் வெளிப்படும். அவரின் இந்த தத்துவத்தில் அந்த அம்மாவிற்கு உடன்பாடில்லை என்பது அவர்களின் பேச்சில் இருந்து புரிந்தது. ஆணின் சில வறட்டு சித்தாந்தங்களால், அவரை எதிர்த்து பேசமுடியாத அவரின் மனைவியும் வெறுப்புக்கு உள்ளாகிறார் என்பதுதான் உண்மை.
கொஞ்சம் நம் குழந்தைகளையும் வாழ வைத்துப் பார்ப்போமே. அதில் கிடைக்கும் ஆனந்தம் வேறு எதிலும் இல்லை என உணருவோம். அப்போதுதான் அவர்களும் நம்மை அன்போடு பிற்காலத்தில் அணுகுவார்கள்.
கட்டாயத்தால் அன்பு வளராது. அன்பால் மட்டுமே அன்பு வளரும். புரிந்து நடப்போம்.
~ அகிலா

புதன், 4 பிப்ரவரி, 2015

பிப்ரவரி 4, உலக புற்று நோய் தினம்

அன்பின் வணக்கம்..
யார் சொல்லுவார் கிளியே..?
இன்று பிப்ரவரி 4, உலக புற்று நோய் தினம்.
இது உலக மக்களிடையே புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனை தடுக்கவும், ஒருக்கால் வந்து விட்டால் உடனடி கண்டுபிடிப்பு, உடனடி சிகிச்சை செய்வதற்காகவும்,உருவாக்கப்பட்டது. யார் இந்த வேலையை இத்தனை அக்கறையுடன் செய்வது என்கிறீர்களா?2000 ம் ஆண்டில், பாரிசில் நடந்த புற்று நோய்க்கு எதிரான உலக சம்மிட் கூட்டத்தில் , இனி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 ம் நாள் , உலக புற்றுநோய் விழிப்பு தினமாக அனுசரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
புற்று நோயை சகட்டு மேனிக்கு தாக்கி, அதனை புறமுதுகிட்டு ஓட வைக்கும் முயற்சியில், 90% சதம் வெற்றியை ஈட்டியவள் என்ற தன்னம்பிக்கையுடனும், நீங்கள் அனைவரும் அன்பால் கொட்டிக் கொடுத்த பெருமையுடனும், இந்த உலகை ஓடியாடி, மிக்கமகிழ்வோடு சந்தித்துக்கொண்டிருக்கிறேன். மேலும் உங்களின் அன்பாலும், ஆதரவாலும், உந்துசக்தியாலும்,அதனால் ஈட்டிய மனம் மற்றும் உடல் வலுவாலும் தான், அந்த நெஞ்சுரத்தொடுதான் இந்த கட்டுரையை, புற்று நோய் சம்பந்தப்பட்ட தகவல்களை, உறுதியோடும், உங்கள் அனைவரின் துணையோடும் மனித இனம் மற்றும் வாழ்வியலில் மிகுந்த நம்பிக்கையோடும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
இன்றைய நிலைமை என்ன?
சர்வதேச, புற்றுநோய் ஆராய்ச்சி முகமம்,(he International Agency for Research on Cancer (IARC)) 2013 , டிசம்பர்
12 ம் நாள்,அன்று ஜெனிவாவில் நடந்த கூட்டத்தில் உலகத்துக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் கொடுத்த தகவல்தான்.. சமீபத்தியது. இதுதான் உலகம் நல நிறுவனத்தின் (World Health Organization) சிறப்பு புற்றுநோய் முகமம் ஆகும். அதன்படி, இதுவரை வந்த தகவல்கள்படி, 2012,ல் புதிய புற்றுநோயாளிகள் மட்டும் 14.1 மில்லியன் ஆகும். இதில் இறந்தவர்கள் எண்ணிக்கை. 8.2 மில்லியன். ஆனால் 2008 ல் புற்று நோயாளிகள் 12.7 மில்லியன்: இறப்பு:7,6 மில்லியன். ஒட்டு மொத்தமாக 2012, ல் உலகம் முழுவதும் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட புற்றுநோயாளிகள்,32.6 மில்லியன். இதில் அதிக பட்சமாக வருவது நுரையீரல் புற்றுநோய்:1.8 மில்லியன் ;13%; அடுத்து இரண்டாம் இடம் பார்ப்பாக புற்று நோய்க்குத்தான. 1.7 மில்லியன், மொத்த எண்ணிக்கையில் 11.9%.மலக்குடல் புற்று 1/4 மில்லியன்,9.7%, அதிக இறப்பு நிகழ்வது என்பது நுரையீரல் புற்று நோயால்தான்.என்பது, இவைகளில் தான் அதிகம்.அதாவது 1.6 மில்லியன், மொத்த புற்றுநோயாளிகள் எண்ணிக்கையில் 19.4%. கல்லீரல் புற்றால் இறப்பு.7 0.8 மில்லியன்..வயிறு 0.8 மில்லியன் '19.1 % ல்லியன், ,மொத்தத்தில்
ஆனால் வரும் 2015 க்குள் உருவாகும் புற்று நோயாளிகளின் எண்ணிக்கையைக் கேட்டால், நமக்கு மயக்கம் வந்து கீழே விழப்போகிறோம்.கவனகாக இருங்கள. 2015, வரப்போகிற புதிய உலகில், உருவாகப போகிற புற்று நோயாளிகள.. 19.3 மில்லியன் என்று, கேட்டால் கண்ணைக் கட்டுகிறது. 2012 ல் புற்று நோயால் இறந்தவர்கள் எண்ணிக்கை:64.8%. நமமிப் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இத எண்ணிக்கை இன்னும் அபரிதமாக கூடும்.
2008 லிருந்து இன்றுவரை, மார்பக புற்று நோயின் வளர்ச்சி என்பது அபரிதமாக 20% கூடியுள்ளது. அதுபோலவே இறப்பும் 14% aஅதிகரித்துள்ளது.இதுவரை ஆய்வு செய்துள்ள 180 நாடுகளில் 140 நாடுகளில் பெண்களிடையே இந்த நண்டுகளின் அரசாட்சி அதிகரித்துள்ளது.
வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளில், மார்பக புற்று நோய் எனபது உயிரைக்குடிக்கும் நோயாக மாறியுள்ளது வேதனையும், கவனிக்கப்பட வேண்டிய விஷமும் ஆகும். இதன் காரணி இ ப்போது மாறியுள்ள வாழ்வியல் முறையே என அறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் புற்று நோய் விழிப்புணர்வு தொடர்பாக பிரச்சாரம் செய்யப்படுகிறது
புற்று நோய் பற்றி சில தகவல்கள் :
உலகில் தினமும் 20,000 மனிதர்கள் புற்றுநோயால் இறந்துபோகின்றனர்.
எய்ட்ஸ், காசநோயைவிட் அதிக இறப்பு புற்றுநோயால்,ஏற்படுகிறது.
உலகில் 180 வகை புற்று நோய்கள உள்ளன.
30% புற்று நோய்கள், ,மது &புகையிலையை தவிர்த்தல், நல்ல ஆரோக்கியமான உணவு, தினந்தோறு ம் உடற்பயிற்சி இவற்றால் தடுத்துவிட முடியும்.
உலகில் இன்று 28 மில்லியன் மனித உயிர்கள் புற்று நோயால் பிழைத்த உயிர் வாழ்கின்றன. ,
நடை பயிற்சியே..25% மார்பக புற்றுநோயைத் தடுத்து நிறுத்திவிடும்.
சிகரெட்டில் உள்ள 6,800 வேதிப்பொருள்களில், 68 புற்று நோயை உருவாக்கும்.
நிஇங்கள் எடுத்துக் கொள்ளும் multivitamin மாத்திரைகள் புற்று நோய மற்றும்,இதய நோய்களை உருவாக்கும் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மார்பக் புற்று நோய் அமெரிக்காவில் வருடந்தோறும் 450 ஆண்களைப் பலி வாங்குகிறது.
இன்றைய புற்று நோய் தினத்தின் கரு.."எதுவும் நம்மைத் தாண்டியதல்ல.." Not beyond us..
நாம் புற்று நோயை வென்றுவிடுவோம் .முடியும் என்பதுதான்.

ஒரு குட்டிக்கதை படிக்கலாமா ...


வணக்கம். தோழமைகளே....
மழை! ஓயாத மழை! 
ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை.
அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது.
கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.
அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. 'நான் வெகுநாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி' எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.
இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. 'இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு' எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்திவிட முடிவு செய்தன.
இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், 'நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?' எனக் கேட்டது.
'நான் ஏரியில் தங்கி இருந்தேன்' என்றது ஏரித் தவளை.
'ஏரியா? அப்படியென்றால் என்ன?' எனக் கேட்டது கிணற்றுத் தவளை.
'இந்தக் கிணற்றைப் போன்ற பெரிய நீர் நிலை. அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு' என்றது ஏரித் தவளை.
'இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா?' என்று கேட்டது கிணற்றுத் தவளை.
'இந்தக் கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி' என்றது ஏரித் தவளை.
கிணற்றுத் தவளை நம்பவில்லை. 'நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது' என்றது.
ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை.
எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து 'நீ பொய்யன், புரட்டன், உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் ஆபத்து' என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன.
அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கிய போது, அதனுள் தாவிச் சென்று குதித்த ஏரித் தவளை, தோண்டித் தண்ணீ­ருடன் மேலே சென்றது. தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது.
தன்னம்பிக்கை அற்ற முட்டாள்களிடம் வாதாடுவதை விட அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதே சிறந்தது....
எதிலும் எப்போதும். தன்னம்பிக்கை யுடன் இருப்பது நம்மை நாம் நினைத்ததை செய்ய வைக்கும்....‪#‎உண்மைதானே‬

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

“உண்மையைச் சொல்லுங்கப்பா...” – பாப்பனப்பட்டு வ.முருகன்


சின்னஞ்சிறு கதை – 7
=====================
குமரவேலனுக்கு ஒரே குழப்பமாயிருந்தது. எப்போதுமே தன்னிடம் அதிர்ந்து ஒரேயொரு வார்த்தைகூட பேசாத அப்பா, இன்று தன்னிடம் கடுமையாகப் பேசிவிட்டாரே..! தான் எதைக் கேட்டாலும் மறுப்பேச்சின்றி நிறைவேற்றுபவர், இன்று எடுத்தெறிந்து பேசிவிட்டாரே..! இதன் காரணம் என்னவாக இருக்க முடியும்..?! உண்மை புரிபடாமல் உளைச்சலில் உழன்றுகொண்டிருந்தான் அவன்.
அவர் அப்படி கோபிக்கும் அளவிற்கு தான் தவறொன்றும் செய்யாத நிலையில், ஏன் தன்மீது அவருக்கு இவ்வளவு காட்டம்..?! இத்தனைக்கும் அப்போதுதான் அறிவிக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில்,அவ்வூர் உயர்நிலைப் பள்ளியிலேயே நாம்தானே 485 மதிப்பெண்களுடன் முதல் மாணவனாகத் தேறி அவருக்கும்,பள்ளி,குடும்பம்,ஊர் என அனைவருக்கும் பெருமையை வாங்கித் தந்திருக்கிறோம்...ஆனால், ஏன் இந்த அப்பா இப்படித் தன்மீது கோபத்தைக் காட்டுகிறார் என்பது புரியாமல் தவித்துக்கொண்டிருந்தான். காலையில் அவருக்கும் தனக்கும் நடந்த உரையாடலை அசைபோடத் துவங்கினான்.
”அப்பா... நான் பத்தாம் வகுப்புல ஸ்கூல்லயே முதல் மாணவனா வந்ததைவிட, பன்னண்டாம் வகுப்புல வந்தாத்தான், பின்னாடி நீங்க நெனைக்கிற மாதிரி பெரிய படிப்பெல்லாம் படிச்சி,ஒரு நல்ல வேலைக்குப் போயி, எனக்காக இவ்ளோ கஷ்டப்பட்ற உங்களை ஒக்கார வச்சி சோறு போடமுடியும்ப்பா...அதனால, நம்ம பக்கத்து ஊருலயிருக்கிற ஹையர் செகண்டரி ஸ்கூல்ல சேர்த்துவிடுங்கப்பா...எங்க வாத்தியாருங்களும், அங்க சேர்ந்து படிச்சா நல்லா கோச்சிங் தருவாங்கண்ணு சொல்றாங்கப்பா...என்னை அந்த ஸ்கூல்லயே சேர்த்து விட்றியாப்பா? – கேட்டுவிட்டு, அப்பா என்ன பதில் சொல்லப்போகிறார் என்று அவர் முகத்தை ஆவலோடு நோக்கியவனுக்கு, அவரிடமிருந்து அப்படியொரு சுடுசொல் சட்டென பதிலாய் வந்து தன்னைப் பொசுக்கிப்போட்டுவிடும் என்று எதிர்பார்க்காதவனாய் அதிர்ந்தான்.
“அங்கெல்லாம் சேக்க முடியாது... அந்த ஸ்கூல் உனக்கு வேணாம்... நான் உன்னை வெளியூர்ல இருக்கிற ஆஸ்டல்ல சேர்த்துப் படிக்க வைக்கலாம்னு இருக்கேன்..வீணா ஆசைய வளத்துக்கிட்டு திரிஞ்சி ஏமாந்து நிக்காத...” – சொல்லிவிட்டு காலையில் கிளம்பி வேலைக்குப் போனவர் திரும்பி வரும்வரை, அம்மா பலமுறை கூப்பிட்டும் சாப்பிடப்போகாமல், ’அப்பா அப்படி சொன்னதற்குக் காரணம் தெரியாமல் சாப்பாட்டைத் தொடுவதில்லை’ என்ற வைராக்கியத்தோடு உண்ணாமல் சத்தியாகிரகமிருந்தான்.
அழுகை,பசி என இவற்றோடு குழப்பமான மன நிலையும் சேர்ந்து அவனை அழுத்த, என்ன செய்வதெனப் புரியாதவனாய், வீட்டிலிருந்த, நைந்து பிய்ந்து தொங்கிய பழங்கோரைப்பாயை எடுத்து சாணி மெழுகிய தரையில் விரித்துப் போட்டு படுத்தவன்,அப்படியே எவ்வளவு நேரம் உறங்கிப்போனானோ?! அவன் அப்பா மாலை, வேலையிலிருந்து திரும்பி, அவன் அம்மாவுடன் பேசும்போதுதான் உறக்கத்திலிருந்து விடுபட்டிருந்தான். இருந்தாலும் அம்மா அவரிடம் தான் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டுக்கொண்டிருக்க, உண்மை அறியும் பொருட்டு,அப்போதும் உறங்குவதாகவே பாசாங்கு காட்டினான்.
“அப்படி என்னங்க நம்ம புள்ள கேக்கக் கூடாததக் கேட்டுப்புட்டான்னு, காலையில புள்ளய அப்படி மொறைச்சிட்டுப் பூட்டிங்க..?பாவம் புள்ள,அழுது அழுது கண்ணு வீங்கி,சாப்பிடாமக்கூட தூங்கிப்பூட்டான் தெரியுங்களா...?” – அங்கலாய்த்தாள்.
”அடிப்போடி...கூறு கெட்டவளே..! அவன் இன்னைக்கு ஒரு நாள் அழுவறான்னு அவன் சேக்கச் சொல்ற ஸ்கூல்ல சேத்தோம்னு வைய்யி...அப்புறம் ‘ஏம்பா அந்த ஸ்கூல்ல சேத்திங்க’ன்னு நெதோம் அழுதுக்கிட்டு வந்து நிப்பான்... பரவாயில்லியா..? – நிதானமாய்க் கேட்டார்.
”என்ன காரணம்னு உடைச்சி சொல்லாம இப்படி பொடிவச்சிப் பூசிமொழுகுனமாதிரிப் பேசினா எனக்கெப்படிங்க புரியும்..? அவன் அழுவற அளவுக்கு அங்க என்ன புலியும் சிங்கமுமா பாடம் எடுக்கப்போவுது? இல்ல அவன் கூடத்தான் பூதங்களும் பிசாசுகளும் படிக்கப் போவுதா..? இத்தனைக்கும் அது கவருமெண்ட்டு ஸ்கூல்தான்...நமக்கு ஒரு பைசா செலவு கிடையாது...அப்புறம் ஏங்க காலையில அவனை அப்பிடி ஏசினீங்க...” – கொஞ்சம் வெறுப்புடன்தான் கேட்டாள்.
சற்று நேரம் அப்பா மௌனம் காக்க, இதற்குமேலும் பொறுக்க முடியாது என எழுந்த குமரவேலன், நேரிடையாகவே அப்பாவைப் பார்த்து, “இவ்ளோ நேரம் அம்மாவும் நீங்களும் பேசிக்கிட்டிருந்ததை நான் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன்...இப்பவாவது உண்மையைச் சொல்லுங்கப்பா...பிரைவேட் ஸ்கூல்ல பணம் கட்டிப் படிக்கச்சொல்லி நான் கேட்டு அதை நீங்க மறுத்திருந்தா அதுல ஒரு நியாயம் உண்டு...ஆனா கவர்ன்மெண்ட் ஸ்கூல்லப் படிக்க ஏம்பா இவ்ளோ எதிர்ப்புக் காட்றீங்க..?சொல்லுங்கப்பா...” – அவர் கைகளைப் பிடித்து கெஞ்சத்துவங்கினான்.
கலங்கிய விழிகளோடு அவனை ஏறிட்டவர், அவனை வாஞ்சையோடு அணைத்தபடி, ”இவ்ளோ நாளா உன்ன ஒரு வார்த்தைகூட கடிஞ்சி பேசாத நான் காலையில அப்பிடிப் பேசக் காரணம் இருக்குப்பா... நீ சேத்துவிடச்சொல்லிக் கேட்ட அந்தக் ஸ்கூல் வாசல்லதான் நான் செருப்புத் தச்சிக்கிட்டிருக்கேன்ம்ப்பா...அங்க உன்ன சேத்துவிட்டா, உங்கூடப் படிக்கிற மத்தப் புள்ளைங்க என்ன வச்சி உன்ன டெய்லி கேவலமா பேசும்ப்பா...அந்த அவமானத்துல உன் படிப்ப நீ எங்க கோட்டை வுட்ருவியோன்னுதான் அப்பா அப்படிப் பேசிட்டேம்ப்பா...என்னை மன்னிச்சிட்றா தங்கம்...” – என்றவரின் கண்களிலிருந்து கண்ணீர் அருவி கரைபுரண்டோடியது.
காரணம் தெரிந்து ஒரு கணம் திடுக்கிட்ட குமரவேலன்,உடனே சுதாகரித்துக்கொண்டு,அப்பாவின் கண்ணீரைத் துடைத்தபடி,”அப்பா... நான் உங்க புள்ளப்பா... நான் படிக்கப்போற வாசல்ல நீ செருப்பு தைக்கிறத நான் எப்படிப்பா தரக்குறைவா நெனைப்பேன்..? இத்தனை நாளா நம்ம குடும்பத்துக்குச் சோறு போட்ற இந்தத் தொழில், இத்தனை நாளா என் படிப்புக்கு உதவின இந்தத் தொழில், இப்ப மட்டும் எப்படிப்பா எனக்கு அவமானமா மாறிடும்..?என் ஸ்கூல் வாசல்ல நீ செருப்புத் தச்சா என் படிப்பு கெடாதுப்பா...இன்னும் நல்லா படிக்கத்தூண்டும்ப்பா... நீ பட்ற கஷ்டத்தை டெய்லி பாத்துட்டுப்போகும்போது, என் படிப்புக்காக அப்பா இவ்வளவு கஷ்டப்பட்றாரேன்னு, மத்தப் பசங்கமாதிரி அரட்டையடிக்காம மேல மேல வெறித்தனமா படிக்கணும்னு தோணும்ப்பா...என்னை நீ செருப்பு தைக்கிற ஸ்கூல்லயே சேத்துவிடுங்கப்பா...” – என்றவனை, “என் வைரம்டா நீ..! நீ ஆசைப்பட்டமாதிரி அந்த ஸ்கூல்லயே சேத்துவிட்றேன்...அங்கயே சேந்து படிடா செல்லம்..” என்று மகிழ்ச்சியோடு அணைத்தபடி உச்சிமோந்தார்.
இருவரையும் கண்களில் நீர் கசிய பெருமையோடுப் பார்த்துக் கொண்டிருந்தாள் குமரவேலனின் அம்மா.

வாய் விட்டுக் கேளுங்கள்... மனம் விட்டுப் பேசுங்கள்....


அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு, இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!!
உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன.
என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள்.மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது.அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி.இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?
ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான். விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.
வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும்,தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.
கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"
அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"
வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"
"தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார்.அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார்.படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்"
வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.
மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள்.அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை.அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான்.இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.
மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"
திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.
வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும்,துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.
இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம். மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?
எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும்,தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.
புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.
தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.
எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுக் கேளுங்கள்... மனம் விட்டுப் பேசுங்கள்....
அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு, இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!!