சனி, 17 அக்டோபர், 2020

 

தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்

தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)


1.    தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி

          தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;

     என்னப்பன் என்னையன் என்றால் - அதனை

          எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)

 

2.    தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன

          செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;

     மானொத்த பெண்ணடி என்பான் - சற்று

          மனமகிழும் நேரத்திலே கிள்ளி விடுவான். (தீராத)

 

3.    அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை

          அழஅழச் செய்துபின், "கண்ணை மூடிக்கொள்;

     குழலிலே சூட்டுவேன்" என்பான் - என்னைக்

          குருடாக்கி மலரினைத் தோழிக்குவைப்பான். (தீராத)

 

4.    பின்னலைப் பின்னின் றிழுப்பான்; - தலை

          பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;

     வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி

          வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத)

 

5.    புல்லாங் குழல்கொண்டு வருவான்! - அமுது

          பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;

     கள்ளால் மயங்குவது போலே - அதைக்

          கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். (தீராத)

 

6.    அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்

          ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;

     எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்

          எங்களைச்செய்கின்ற வேடிக்கையொன்றோ? (தீராத)

 

7.    விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்

          வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;

     இளையாரொ டாடிக் குதிப்பான்; - எம்மை

          இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். (தீராத)

 

8.    அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி

          அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,

     எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்

          யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத)

 

9.    கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்; - பொய்ம்மை

          சூத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;

     ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்

          அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத)

பாரதியார் 

பாடலின் பொருள்

கண்ணன் மிகவும் சூட்டிகையான விளையாட்டுப் பிள்ளை. அவன் வசிக்கும் தெருவில் இருக்கும் பெண்களுக்கு எல்லாம் எப்போதுமே அவனால் ஓயாத தொல்லை.

அன்பாய் சாப்பிட நல்ல பழம் எடுத்து வந்து கொடுப்பான். அதன் தின்னும் போது பாதியில் தட்டிப் பறித்துக் கொள்வான். என் அப்பா.. என் ஐயா என்று என்ற கெஞ்சி கேட்டால் அந்த பழத்தை கடித்து எச்சில் படுத்திக் கொடுப்பான்.

தேன் போல இனிய பண்டங்கள் எடுத்து வந்து நாம் என்ன செய்தாலும் எடுக்க முடியாத படி எட்டாத உயரத்தில் வைப்பான்..நீ மான் போல அழகான பெண் என்று வர்ணிப்பான் அப்பெண் மனம் மகிழும் நேரத்தில் கிள்ளி விடுவான்.

அழகான பூக்களைக் கொண்டுவந்து காட்டி அதை கொடுக்காமல் அழவைப்பன். பின்னர் நீ கண் மூடிகொள் நான் உன் கூந்தலில் வைக்கிறேன் என்று சொல்லி கண் மூட வைத்து சட்டென்று அந்த பூவை அவளின் தோழிக்கு வைத்து வெறுப்படைய வைப்பான்

பின்னாடி இருந்து பின்னலைப் பற்றி இழுப்பான் உடனே தலையைத் திருப்பி பார்க்கும் போது முன்னால் வந்து நிற்பான். வண்ணம் மிகுந்த அழகான புது சேலைக் கட்டி வந்தால் அதில் புழுதியை வாரி போட்டு அழுக்காக்கி மனதை வருந்த வைப்பான்

புல்லாங்குழல் எடுத்து வந்து இனிமையான அமுது படைப்பது போல மனம் நிறைக்க இனிய கீதம் படிப்பான். கள் குடித்து மயங்கி இருப்பது போல அந்த கீதத்தில் கண் மூடி வாய் திறந்து கேட்டுக்கொண்டு இருப்போம்

வேலை செய்து களைத்து (அங்காந்திருக்கும்) உட்கார்ந்திருக்கும் போது கண்ணன் வந்து வாயிலே ஆறேழு கட்டெறும்பை போட்டு விடுவான். யாராவது எங்காவது இது போல செய்வதைப் பார்த்து இருக்கிறீர்களா? இதெல்லாம் கண்ணன் எங்களை செய்கின்ற வேடிக்கை விளையாட்டுக்கள் ஆகும்

வீட்டிற்கு வந்து விளையாட அழைப்பான். வீட்டில் வேலை இருக்கிறது என்று சொன்னாலும் அதைக் கேட்காது இழுத்து செல்வான். எல்லா சின்ன பிள்ளைகளோடும் நன்றாக குதித்து விளையாடுவான் சட்டென்று யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு சென்று எல்லோரும் விளையாடிக் கொண்டு இருப்பதாக போட்டுக் கொண்டுது நல்லவன் போல இருப்பான்

அவன் தன்னுடைய அம்மாவுக்கு ரொம்ப நல்லவன். வீட்டில் இருக்கும் கணவனை இழந்த அத்தைக்கும் (மூளி) நல்லவன். அதே போல அப்பாவுக்கும் ரொம்ப நல்லவன். பெண்களை துன்பம் கொள்ள வைக்கும் எல்லா பெரியவர்களுக்கும் அவன் ரொம்ப நல்லவன் போல நடிப்பான்.

மற்றவர்களுக்கு இடையே கோள் மூட்டி விடுவதில் ரொம்ப சாமார்த்தியசாலி, பொய் புனைவதிலும், பழி சொல்வதிலும் கூசாத கபடதாரி (சழக்கன் வஞ்சகன்/ கபடன்). ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்ற வகையில் ஒவ்வொரு வகையில் பேசி எல்லா பெண்களையும் ஒருவருக்கு ஒருவர் பகையாக மாற்றி விடுவான் கண்ணன்.


வியாழன், 15 அக்டோபர், 2020

மங்கையராகப் பிறப்பதற்கே

கவிமணி பாடல் மற்றும் பொருள்

 

மங்கையா ராகப் பிறப்பதற்கே - நல்ல

மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா!

பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ - இந்தப்

பாரில் அறங்கள் வளரும், அம்மா!

 

அல்லும் பகலும் உழைப்பவர் ஆர்? - உள்ளத்து

அன்பு ததும்பி யெழுபவர் ஆர்?

கல்லும் கனியக் கசிந்துருகித் - தெய்வ

கற்பனை வேண்டித் தொழுவர் ஆர்?

 

ஊக்கம் உடைந்தழும் ஏழைகளைக் காணில்

உள்ளம் உருகித் துடிப்பவர் ஆர்?

காக்கவே நோயாளி யண்டையிலே - இரு

கண்ணிமை கொட்டா திருப்பவர் ஆர்?

 

சிந்திய கண்ணீர் துடைப்பவர் ஆர்? - பயம்

சிந்தை யகன்றிடச் செய்பவர் ஆர்?

முந்து கவலை பறந்திடவே - ஒரு

முத்தம் அளிக்க வருபவர் ஆர்?

 

உள்ளந் தளர்வுறும் நேரத்திலே - உயிர்

ஊட்டும் உரைகள் உரைப்பவர் ஆர்?

அள்ளியெடுத்து மடியிருத்தி - மக்கள்

அன்பைப் பெருக்கி வளர்பவர் ஆர்?

 

நீதி நெறிநில்லா வம்பருமே - நல்ல

நேர்வழி வந்திடச் செய்பவர் ஆர்?

ஓதிய மானம் இழந்தவரை - உயர்

உத்தமர் ஆக்க முயல்பவர் ஆர்?

 

ஆவி பிரியும்அவ் வேளையில் - பக்கத்து

அன்போ டகலா திருப்பவர் ஆர்?

பாவி யமனும் வருந்திடாமல் - ஈசன்

பாதம் நினைந்திடச் செய்பவர் ஆர்?

 

ஏங்கிப் புருஷனைத் தேடியழும் - அந்த

ஏழைக் கிதஞ்சொல்லி வாழ்பவர் ஆர்?

தாங்கிய தந்தை யிழந்தவரைத் - தினம்

சந்தோஷ மூட்டி வளரப்பவர் ஆர்?

 

சின்னஞ் சிறிய வயதினிலே - ஈசன்

சேவடிக் கன்பெழச் செய்பவர் ஆர்?

உன்னம் இளமைப் பருவமெலாம் - களிப்பு

உள்ளம் பெருகிடச் செய்பவர் ஆர்?

 

மங்கைய ராகப் பிறந்ததனால் - மனம்

வாடித் தளர்ந்து வருந்துவதேன்?

தங்கு புவியில் வளர்ந்திடும் கற்பகத்

தாருவாய் நிற்பதும் நீர் அலவோ?

 

செம்மையிற் பெற்ற குணங்களெலாம் - நீங்கள்

செய்வினை யாலே திருத்துவீரேல்,

இம்மைக் கடன்கள் முடித்திடவே - முத்தி

எய்திச் சுகமா யிருப்பீரே.


பாடலின் பொருள்:


இந்த பூமியில் பெண்களாய் பிறப்பதற்கு உலகத்திலேயே யாரும் செய்யாத பெரும் தவம் செய்திருக்க வேண்டும். இந்த பூமியில் பெண்களின் கைகளைப் பார்த்தது தான் அறமே வளர்கிறது. அவர்கள் இல்லையென்றால் அறம் இல்லாது போயிருக்கும்.

 

இரவு பகல் பாராது அயராது உழைப்பவர் யார்? பெருங்கருணை கொண்ட உள்ளத்தோடு அன்பு ததும்ப எழுவது யார்? உடைக்க முடியாத கல் கூட கனி போல கனிந்து நெகிழ தெய்வத்திடம் உள்ளம் உருகி தொழுபவர் இந்த உலகத்திலே யார்?

 

வாழ வழியின்றி மனம் நொந்து துடிக்கும் ஏழையின் கண்ணீரைக் கண்டால் ஒரு தாயைப்போல மனம் வாடித் துடிப்பவர் யார்? தன் சுற்றத்திலே ஒரு நோயாளி இருந்தால் அவரை காத்திட கண்ணிமைக்காமல் கூட இருந்து பணிவிட செய்து காப்பது யார்?

 

நாம் சிந்திய கண்ணீர் துடிப்பது யார்? நம்முடைய மனதில், எண்ணத்தில் பயம் இருந்தால் அதை அகற்றி நமக்கு தைரியம் அளிப்பது யார்? நம்மை பற்றிய கவலை என்ற நோய் பறந்து விலகிட ஒரு அன்பு முத்தம் தருவது யார்?

 

நம்முடைய மனம் தளர்ந்து சோர்ந்து கிடக்கும் நேரத்தில் நம்மை எழுச்சி கொள்ள வைக்கும் வகையில் மன உறுதி கொடுத்து செயல்பட வைப்பது யார்தம்முடைய மக்களை மிக்க ஆசையுடனும் அன்புடனும் மடியில் கிடைத்து மேலும் மேலும் அன்பை கொடுப்பது யார்?

 

இந்த உலகத்தின் நீதி நெறிகளை கடைபிடிக்காத ஒரு மனிதனை நல்ல வழியில் நடத்திடும் உள்ளம் கொண்டவர் யார்? வழி தவறி இழிவான செயலில் ஈடுபாடு மற்றவர் மத்தியில் மானம் இழந்து தவிப்பவரை அவர்களிடையே உயர்த்தி நல்லவராக நிறுத்துவது யார்?

 

நம்முடைய இறப்பு நெருங்கும் நேரத்திலும் அன்பு காட்டி நம்மை விட்டு பிரியாது இருப்பவர் யார்? அந்த காலனும் நம்மை நெருங்கிடாமல் காத்திட ஈசன் பாதம் வணங்கி நமக்கு துணையாக இருப்பவர் யார்?

 

தன்னை விட்டுப் பிரிந்த கணவனை என்னை வருந்தும் மற்ற பெண்ணுக்கும் இதமாய் ஆறுதல் சொற்கள் தனது அணைத்து வாழ்பவர் யார்? நம்மை பொன்போல காத்து தாங்கி வந்த தந்தை நம்மை விட்டுப் பிரிந்தாலும் நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் நம்மோடு இருந்து வழி நடத்துபவர் யார்?

 

நாம் சின்னஞ்சிறிய வயதினராக இருக்கும் போதே நமக்கு நல்வழி காட்டும் நீதி நெறி புகட்டி ஈசனின் பாதமே நன்மை தரும் என்று சொல்லி வளர்ப்பவர் யார்? உன்னுடைய இளமைப்பருவம் எல்லாம் எந்த துயரமும் நெருங்காது ஒரு உற்சாகத்தோடும் களிப்போடும் இருக்கச் செய்பவர் யார்?

நீ பெண்ணாகப் பிறந்ததை எண்ணி மனம் தளர்ந்து வாடி வருந்துவது எதற்காக? எல்லோருக்கும் எல்லாமும் வாரி வழங்கிடும் ஒரு கற்பகத் தரு போல இந்த மண்ணில் இருப்பது நீ அல்லவோ பெண்ணே..

 

உங்கள் பிறவியிலேயே பெற்ற பல நல்ல சிறந்த குண நலன்களை நீங்கள் செய்யும் எல்லா செயலிலும் வெளிப்படுத்துங்கள். இந்த உலக வாழ்வியில் அதனாலே பல சிறப்புகள் பெற்று நலமாய் உயர்ந்து எல்லோர் முன்பும் இருப்பீர்கள்.

 

(இங்கு யார் ? என்று கவிஞர் கேள்வி எழுப்பி சுட்டிக்காட்டுவது பெண்களைத் தான். பெண்களே நீங்கள் தான் இந்த உலகத்தின் மிகப்பெரிய ஆற்றல். நீங்கள் இல்லாமல் இந்த உலகில் உயிர்கள் நிலைத்திருப்பது அரிது. எனவே உங்களை நீங்களே என்னடா இது பெண்ணாக பிறந்து விட்டோமே என்று தாழ்வாக எண்ண வேண்டாம்என்ற கருத்தையே கவிஞர் சுட்டுகிறார்)