செவ்வாய், 10 மே, 2016

கலங்காதே கண்மணியே....

நிழலாடும் உறவெல்லாம்
நிஜமாகிப் போவதில்லை..

கானல் வரிகள் எல்லாம்
கடலாகிப்போனால்...!
கண்ணீர் வரிகளுக்கு
வாய்க்கால்கள் ஏது...?

நிலவென்றும் தேய்வதில்லை
உண்மைகளும் ஓய்வதில்லை..
காணும் காட்சிகளும்
கலைந்துவிடும் பொய்யென்று
புரிந்து நில்..

நீ நடக்கும் பாதையெல்லாம்
நீ போடும் பாதையென
நெஞ்சத்தில் உரம் கொண்டு
நம்பிக்கையுடன் செல்..

உறவென்றும் சத்தியமா...?
வாழும் உயிர்கள் தான் நித்தியமா...?

கலங்குகின்ற நெஞ்சே..
அன்பெல்லாம் பொய்யென்றால்
வாழ்வில் மெய்யேது...??

தூற்றுவார்கள் தூற்றட்டும்..
உன்னை போற்றுவார்கள் போற்றட்டும்..
எதற்கும் செவிமடுக்காது
எண்திசையும் பவனிவரும்
காற்றாக வலம்வருவாய்..

புறக்கணிப்பும், அலட்சியமும்
புறந்தள்ளி நடைபோடு..
பூக்களின் நந்தவனம்
உனக்காக பூத்திருக்கும்..
புன்னகையாய் எந்நாளும்.....!

கருத்துகள் இல்லை: