வெள்ளி, 2 டிசம்பர், 2022

கடவுளின் தற்கொலை

கடவுள் இருக்கிறாரா?
அட...
இல்லாமலா...?
கண்டவர் எல்லாம்...
கடவுளைக் கண்டவரில்லை
(ஏளனத்தில்) கண்டவரெல்லாம்...
கடவுளைப் படைத்தும்
கடவுளைப் போற்றியும்
கடவுளைத் தூற்றியும்
கடவுளை வணங்கியும் வாழ்கிறார்கள்...
அது சரி..
நெருப்பில்லாமல் புகையுமா?
 
நானும் கடவுளைத் தேடி
கொஞ்சம் பயணித்தேன்...
 
அம்மா..
என்றொரு அழுகுரல்..
அணைக்க ஆளில்லை
அன்னமிட ஒருவருமில்லை
அநாதையாய் நின்றது ஒரு குழந்தை
அக்குழந்தை சுற்றித் திரிந்த வீதியில் எல்லாம்
கோவிலில் சொகுசாய் அமரவைத்து
பூட்டப்பட்டிருந்த கடவுள்
தனக்கு சாற்றப்பட்ட பூமாலையில் மூச்சு முட்ட
தற்கொலை செய்து கொண்டார்..
 
படைத்தவன் படைத்தான்
அழகாய் பெண்களை
ஆணவத்தில் ஆண்களை அவனைப் போலவே...
அவளுக்கு ஆடையில் குறையில்லை
இவனுக்கோ பார்வையில் குறைவு
ஆதிக்க வெறிகொண்டு
வன்புணர்ச்சி செய்து தூக்கி எறிந்துவிட்டு
அவள் உள்ளத்தையும் எரித்துவிட்டு
கோவிலில் பாவமன்னிப்பு கேட்ட பொழுதில்
மீண்டும் ஒருமுறை
கடவுள் தற்கொலை செய்துகொண்டார்..
 
என்னைப்போலவே உன்னைப் படைத்தேன்
என்று இறைவன் சொன்னதாய்
ஏட்டில் எழுதிவைத்தார்..
ஆனால்
நிற பேதம் ஏதுமில்லை..
இன பேதம் ஏதுமில்லை..
சாதி பேதம் ஏதுமில்லை..
சகலரும் ஒன்றே
என்று ஆணி அடித்தாற்போல்
சொல்ல மறந்தானோ?
உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று
அவன் முன்னே ஒதுக்கியது கண்டு
மற்றுமொருமுறை
கடவுள் தற்கொலை செய்துகொண்டார்...
 
மெல்லக் கடந்து செல்கையில்
ஐயா... பசி...
ஈனமாய் ஒலித்தது ஒரு குரல்
ஆய்ந்து ஓய்ந்து உலகு விடும் வயதில்
முதியவர் ஒருவர்..
கடவுளிடம் கேட்க முடியாமல்
மனிதன் முன் கை நீட்டி நிற்க..
பார்த்துக்கொண்டிருந்த கடவுள்
பட்டென்று தற்கொலை செய்து கொண்டார்...
 
உங்களுக்கு ஒரு ஐயம் எழலாம்..
எத்தனைக் கடவுள்கள் இங்குண்டு?
எத்தனை முறை அவர் தற்கொலை செய்வார்?
 
எனக்கு அந்த ஐயம் இல்லை
இல்லவே இல்லை..
 
அண்டவெளி தன்னில்
ஒரு பால்வெளியில்
உள்ளடங்கி இருக்கிறது பூமி..
ஒரே ஒரு பூமிக்கு இருப்பது
ஒரே ஒரு வானம்..
எனில் படைத்தவன் பலவாக
எப்படி இருக்கமுடியும்?..
யாரும் கேள்வி கேட்கவில்லை..
 
கற்பனை கோடிட்டு
வானம் பிரித்தான்
பூமி பிரிந்தான்..
கடல் பிரித்தான்
காடு பிரித்தான்...
சுடு...காட்டையும் பிரிந்தான்
தன்னல மனிதன்..
இந்த வையகத்தில் இருக்கும்
ஒரே ஒரு தன்னல உயிரி
நாம் தானே..
 
பிரித்த
ஒவ்வொரு இடத்துக்கும்
ஒவ்வொரு தேவைக்கும்
ஒவ்வொரு வேளைக்கும்
தன் விருப்பம் போல ஆட்டிப்படைக்க
என்ன செய்யலாம் என்று நினைத்தவனுக்கு
வந்து வாய்த்தது தான்
அந்த அற்ப போதை...
அட.. மதத்தைத் தான் சொல்லுகிறேன் தோழர்களே..
 
ஒருவனுக்கு ஒரு மதம் பிடித்தால்..
ஒரு கடவுள் போதுமா?
திசைக்கொரு கடவுள்
மொழிக்கொரு கடவுள்..
இனத்திற்கொரு கடவுள்..
அவன் மனம் எண்ணும் போதெல்லாம்
படைத்தான் எண்ணிலடங்கா கடவுள்கள்..
 
அதில் ஒருவர் குற்றம் சுமத்தப்பட்டு
சிலுவையில் அறையப்பட்டார்..
ஒருவர் தவறுதலாக
அம்பெய்திக் கொல்லப்பட்டார்..
ஒருவர் விதி நொந்து
தற்கொலை செய்துகொண்டார்..
 
இன்றைக்கும் கடவுள் இருக்கிறார்
மரணமில்லாக் கடவுள்
அவர் மரணித்துக்கொண்டே இருக்கிறார்..
மதமெனும் சிறையில் இருந்து
மீளவே முடியாமல்..
 

#சங்கர்_நீதிமாணிக்கம்

சிறையில் கடவுள்

 எதோ ஒரு நாளில்
எதோ ஒரு இடத்தில்
அறிமுகமானார்
அறிமுகமில்லாத அந்த மனிதர்..
 
மெல்ல பேசிக்கொண்டதில்
உலகத்து உயிர்கள் தன் படைப்பென்றார்
தான் நினைப்பதே இவ்வுலகில் நடக்குமென்றார்
இவ்வுலகத்தில் இருப்பவனவற்றில் எல்லாம்
உயர்ந்தது நானேயென்றார்...
 
எதோ ஒரு இறுமாப்பு
எதோ ஒரு தற்பெருமை
உன்னால் என்ன முடியும் என்ற இளக்காரம்...
 
பார்த்துக்கொண்டும்
பேசிக்கொண்டும் இருந்தான் அவன்
அந்த மனிதனோ சளைக்கவில்லை...
தன் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போக...
 
பொறுமையிழந்த அவன் கேட்டான்..
நீங்கள் யாரென்று...
நான் தான் கடவுள் என்றார் அந்த மனிதர்..
 
மெல்லச் சிரித்த அவன் சொன்னான்...
உலகத்தை படைத்தது நீரென்றால்
இந்த உலகத்தில் உம்மைப் படைத்தது நான்தானே..
பிறகெப்படி நீர் என்னை விட உயர்ந்தவர் என்றான்..
 
நீண்ட விவாத்தில்
ஒருவருக்கொருவர் சளைக்காத நிலையில்
அவன் சொன்னான்..
கடவுளே..
பொறுத்தருள்க...
உம்மை மதச்சிறையில் அடைக்கிறேன்...
முடிந்தால் மீண்டு விடுதலை பெறுங்கள் என்றான்...
தோல்வியில் அமைதியானார் கடவுள்..
 
#சங்கர்_நீதிமாணிக்கம்

புதைந்த உலகம்

 சொற்கள் சேராத இடங்களில்
மோதிக்கொண்டிருக்கிறது
எண்ணத்தின் சிதறல்கள்...
வாஞ்சையுடன்
முகம்பார்த்து
சொல்லொன்று
இடிந்த இதயத்தின்
வலி நீக்க
இதமாக வருமோ...?
ஏங்கி எதிர்பார்த்த வேளையில்
எல்லாம் பொய்யென்று ஆனது...!
இவ்வுலகம் காலடியில்
புதைந்தே போனது...!
 

#சங்கர்_நீதிமாணிக்கம்

நானில்லா நாள்

 ஏதோ ஒரு நாளில்
மரங்களில் இருந்து
உதிர்ந்து விழுகிறது இலைகள்
வானில் இருந்து
மண்ணில் விழுகிறது மழை
கண்ணில் இருந்து
கொட்டுகிறது கண்ணீர்த் துளி
கரை தாண்டி பாய்கிறது
தாலாட்டும் கடலலை
ஏதோ ஒரு நாளில் தான்
நீயும்
பூக்களாய்த் தூவுகிறாய்
உன் புன்னகையை....
அந்த நாளில்
நான் எனோ இருப்பதில்லை
 

#சங்கர்_நீதிமாணிக்கம்

அழகின் கவிதை

 இறகு விரித்த வண்ணத்துப்பூச்சி
நீயென வியந்து நின்றேன்
மலர்ந்த நறுமலர்
நீயென மயங்கி நின்றேன்
ஆடும் மயில்
நீயென அசந்து நின்றேன்
இசைக்கும் குயில்
நீயென கிறங்கி நின்றேன்
இதயம் தொட்ட உன்னழகை 
கவிதையாக்கி
காலடி நின்றேன்
சொல்லாத உன் மவுனம்
மெல்லத்தான்
கொல்லாமல் கொல்லுதே
இவ்வுலகை...
 

#சங்கர்_நீதிமாணிக்கம்

மௌன விழி

 மௌன விழிகளால்
மயக்கும் உன் சொற்கள்
மெல்ல
என் காதுகளை வருடிச்செல்ல
பிரியாத
உன் இதழ்களில் இருந்து
மெல்லப் பெயர்ந்து விழுந்தது
ஊமைக் கனவுகள்...
நூலருந்த பட்டமாய்
தடம் மாறி பறக்கிறது
சிறகொடிந்த என் மனம்...
 

#சங்கர்_நீதிமாணிக்கம்

மௌனத்தின் கூக்குரல்

 எல்லா திசைகளிலும்
எதிரொலித்துக்கொண்டே
இருக்கிறது
யாரும் கேட்காத
என் மௌனத்தின்
கூக்குரல்...
ஊமையாகிக்கிடக்கிறது
உலகத்தின் காதுகள்...
உறங்கிக்கிடக்கிறது
ஊருக்காக ஓலமிடும் மனம்...
ஒதுங்கிக்கிடக்கிறது
ஒன்று கூட முடியாத
திசைகள்...
உன்னைப்போலவே...
 
#சங்கர்_நீதிமாணிக்கம்

பாடம்

 உணர்வுகளின் மொழியில்
இலை உதிர்ந்த மரத்தினடியில்
நிழலில்லா நேரத்திலும்
உன்னால் உட்கார்ந்து
எதைப்படிக்க முடிகிறது...?
காலம் செதுக்கி துப்பிய
வாழ்க்கையின் மிச்சத்தில்
எதைக் கொண்டு
இனி வாழ்வது...?
எந்தப்புத்தகம்
பாடம் சொல்லிக்கொடுக்கும்...?
 

#சங்கர்_நீதிமாணிக்கம்

உன் கண்ணாடி

 நீ சிரிந்தால்
என் முகத்தில் புன்னகை...
நீ அழுகையில்
என் முகத்தில் வருத்தம்...
நீ கோபப்பட்டால்
என் முகத்தில் கோபக்கனல்...
நீ பொய் சொன்னால்
என் முகத்தில் ஏமாற்றம்...
உன் முன்னால்
நான் கண்ணாடி என்பது
உனக்கு எப்போது புரியும்...?
 

#சங்கர்_நீதிமாணிக்கம்

காத்திருப்பு

உனக்கான காத்திருப்பில்
பனிக்காட்டு வனாந்திரத்தில்
உறைந்து கிடைக்கும் ஏரியில்
உடைந்து கிடக்கிறது
படகுக்குழாம்...
உனக்கான காத்திருப்பில்
பனிக்காற்றின் ஊதலோ
தனிமையின் வேதலோ
ஏதுமின்றி
தவமிருக்கிறது மனம்...
உன் நினைவுகளே
மௌனத்தின் வேர்களில்
என் உயிர் துடிக்க வைக்கும்
மறைச் சொல்லின் வரிகளாய்
மெல்ல ஒலிக்கிறது...
 

#சங்கர்_நீதிமாணிக்கம்

பிரிதல்

 மரத்தின் கிளையோடு பிணைந்திருந்த
ஒரு இலையைப் போலவே
வாழ்க்கை..
கால மாற்றத்தில்
வசந்தங்கள் போய்
மெல்ல வந்த கோடையைப் போல
வாழ்க்கையின் எல்லையில் இருந்த
மனிதனுக்கு...
ஒரு இலை உதிர்வதைப் போல
இந்த மண்ணில் உதிர்ந்து விடுவது
அவ்வளவு எளிதாக இருப்பதில்லை..

#சங்கர்_நீதிமாணிக்கம்

யானையும் சங்கிலியும்

 பிணைத்திருக்கும் சங்கிலியின்
வலிமை அறியாத யானையாய்
வாழ்வின் சிக்கல்கள்
பெரிதென நினைத்து
நகர முடியாது தேங்கிக் கிடந்தது
மனம்...
 
தேங்கிக் கிடந்தபோது
மூடிக்கிடந்த பாதை
துணிந்து எடுத்துவைத்த
முதல் காலடியில்
மெல்லத் திறந்து கொண்டது...
 
#சங்கர்_நீதிமாணிக்கம்

பிழைக்கும் பயணம்

எந்த போக்குகளும் சரியில்லை
போகும் பாதைகளும் சரியில்லை
முழுமைக்குள் சுழியமாய்
நீண்டுகொண்டே இருக்கிறது பயணம்...
 
மெல்லச் சிறகடிக்கும் பறவைகளையோ
மேனி தீண்டும் தூரல்களையோ
சிரித்துக் கடக்கும் மழலைகளையோ
பார்க்கமுடியா பாரத்தோடு தொடர்கிறது பயணம்...
 
மனதில் நெருங்கி இருந்த உறவுகள்
கைக்குள் அடங்கிப் போன உலகத்தில்
அருகில் இருந்தாலும் அருகாமையாய் நினைத்து
விலகிக்கிடக்கும் உறவின் பயணம்...
 
அடைபட்ட அறைக்குள் ஆளுக்கோர் அலைபேசி
உறவுகளைத்தேடி சமூக தளங்களில் தேடல்
மாய உலகத்து மண்ணுக்குள்
வாழ்வதை மறந்த பிழைக்கும் பயணம்
 
எழுதித் தீர்த்த நாட்களும் போயின
பேசித் தீர்த்த நாட்களும் போயின
பார்த்தாலும் பார்க்காத புதிய நாட்களில்
எந்திரத்தோடு கெஞ்சும் மனிதனின் பயணம்...
 
யாரோ படைத்த பணத்தாலும்
யாரோ படைத்த மதத்தாலும்
வாய்விட்டு சிரிக்கமுடியாத வலிகளோடு
நாளும் தொடர்கிறது இந்த மனிதனின் பயணம்...
 

#சங்கர்_நீதிமாணிக்கம்

யாருமற்ற சிலுவை


 
இவர்கள் சொல்லும் கலிகாலம் என்றாலும் சரி...
அவர்கள் சொல்லும் மீட்பரின்
வருகைக்காலம் என்றாலும் சரி...
நிகழ்காலம் என்னவோ
பிழைப்பைத்தேடி நிலையில்லா ஓட்டத்தில்
காலடியில் மிதிபடும் நெருக்கடியில்...
 
இந்த உலகத்தின் நாட்கள் எண்ணப்படுகிறதோ?
நடப்பதெல்லாம் பார்க்கையில்
நம்பிக்கையின்றியே நகர்கிறது நாட்கள்..
 
சமூகநீதி பட்டத்தினை நூல்கள் கட்டுப்படுத்த...!
என்று அறுந்துவிழுமோ?
புரிதல் இல்லாமலேயே
ஆண்டபரம்பரையென்ற மிதப்பில்
அடிமையென்பதை மறந்துகிடக்குது ஒரு கூட்டம்...
 
மதத்தைப் பற்றிக்கொண்டு
கடவுளைத் தேடும் ஒரு கூட்டம்...
அன்பின் பாதையில்
மனிதத்தைத் தேடும் ஒரு கூட்டம்...
 
போதையூட்டும் மதத்தை விட
அன்பின் பாதையில் சிலுவைகள் அதிகம்..
அதனால் தானோ என்னவோ
வழிகள் எங்கும் அன்பை சுமப்பவருக்காக
காத்துக்கொண்டே இருக்கிறது...
யாருமற்ற சிலுவைகள்
 

#சங்கர்_நீதிமாணிக்கம்