வியாழன், 31 ஜூலை, 2014

தாய் பால்

முகநூல் பதிவு
- நவீன் கிருஷ்ணன் 
( மனிதன் )



தாய் பால் எல்லாம் பழங்கதையாகி போனது.....

இன்றைய தமிழ் மரபில் ஆணும் பெண்ணும் பொருள் ஈட்டுவதற்க்காக இந்த உலகத்திற்கு வந்த உன்னத பிறவிகள் என்பது போல் ஒரு வாழ்வியல் முறை மாற்றப்பட்டுள்ளது என்பதும்,பொருளாதாராத் தேவை இருக்குதோ இல்லையோ காலை முதல் மாலை வரை ஒரு வேலைக்கு ஓட வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்பதை உணர்கிறோமா?


குழந்தை பிறந்ததும் அதை மடித்து ஊருக்கு அனுப்பிவிட்டு இருவரும் பொருளீட்டுவதில் கவனம் செலுத்த மட்டும் ஒரு தலைமுறை தயாராகி வருகிறதே.பாவம் இக்காலக்கட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்பால் என்பதே பழங்கதை ஆகி வருகிறதே அதை உணர்கிறோமா?


தனக்கு பிடிக்கவிட்டாலும் குடும்ப அழுத்தம் காரணமாகவும்,பெற்றோர் உறவினர்களின் கேள்விகளுக்கு அஞ்சி அல்லது அந்த தொந்தரவில் இருந்து தப்பிக்க இந்த தலைமுறை பெண்கள் இளம் குழந்தையைக் கூட காப்பகத்தில் விட்டுவ்ட்டு வேலை வேலை என்று ஓடுகிறார்களே இவர்கள் உருவாக்கும் பொருளைக் கொண்டு எதை வாங்க போகிறார்கள் என்ற உண்மையை யோசித்தோமா?


பெரும்பாலும் பொருள் இல்லாதவர்களைவிட, நடுத்தர வர்க்கத்தை விட வசதி படைத்தவர்கள் தான் அதிகமாக ஒடுவதை பார்க்கிறோமே,இவர்கள் என்றாவது இந்த வாழ்க்கையில் பணத்தின் மதிப்பீட்டை உணர்ந்ததுண்டா?
இதுதானா நம் முன்னோர்களும் நம் சமூகமும் நமக்கு சொல்லிக்கொடுத்தது?இதை தவறென்றால் தவிர்க்க முயற்சிக்க வேண்டாமா?


இன்று இருபது வயதோ,அறுபது வயதோ யாரை வேண்டுமானாலும் கேளுங்கள் “உங்களுக்கு பிடித்தது எது,நீங்கள் எதில் தன்னிறைவு அடைகிறீர்கள்”என்று.90 சதவீதம் பேர்

வாழ்க்கை என்றால் என்ன????

எப்படி நிறைவான வாழ்வை வாழ்வது????

எப்படி மன அமைதி பெறுவது????

எப்படி பிரச்சனையை எதிர்கொள்வது????

எப்படி ஏற்ற இறக்கங்களை சமாளிப்பது????

என்ற தெளிவு இருக்கிறதா என்றால் இல்லை என்ற உண்மை நமக்கு விளங்கும்....

எங்கே சென்றது நம் வாழ்வியல் அறிவுகளும் கோட்பாடுகலும்???

இன்று முனைவர் பட்டம் பெற்ற பெற்றோர்கள் முதல் பெரும்பாலான படித்தவர்கள் வாழ்வின் கடைசி வரை பணம் ஈட்டுவதே வாழ்க்கை என்று வாழ்கிறார்களே!

அதை பார்த்து வளரும் அடுத்த தலைமுறை எப்படி பட்ட வாழ்வியல் சூழல்களை அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளும் சற்று சிந்தித்து பாருங்கள்...


இன்று தேவையான அளவு பொருளை ஈட்டியவுடன் அதை வைத்து வாழவும்,தனக்கு பிடித்ததை இந்த மொழிக்கும்,இயற்கைக்கும்,இனத்திற்க்கும் மற்றும் சமுதாயத்திற்க்கும் செய்வதுமான வாழ்வியலை எத்தனைபேர் மேற்கொள்கிறார்கள்? பணி ஓய்வு பெற்றதும் பலருக்கு பைத்தியமே பிடித்துவிடும் நிலையை காண்கிறோம் இவர்களிடம் இருந்து அடுத்த தலைமுறை எந்த வாழ்வியலை கற்றுக்கொள்ள முடியுமா????

இன்றைய தலைமுறை நம் இன்றைய வாழ்வியலில் எடுத்துக் கொள்வதை விட கேள்வி கேட்டு வாழ்க்கையை அறிந்து,வாழ்வின் நோக்கத்தை புரிந்து விட்டு விட்டுச் செல்லக்கூடிய பல வாழ்வியல் நெறிகளும்,சிந்தனைகளும் இருக்கிறது என்று உணர்ந்து,


“எவருக்கும் எவரும் தாழ்ந்தவரில்லை
அவரவர் திறமை ஒரு துறையில்
எல்லாம் அறிந்தவர் எவருமில்லை
எல்லாம் அறிந்தவர் மனிதரில்லை”


என்பதை உணர்ந்து,அனைவரையும்,அனைத்தையும் கேள்வி கேட்டு,தெளிவு பெற்று,விளக்கம் தெரியாதா,புரியாதா சம்பிரதாயங்களை களைந்து,
புரிதலோடு கூடிய ஒரு பகுத்தறிவுடன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணமும் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் அதுவே நம் தமிழ் சூழலிலும்,இலக்கியங்களிலும்,முன்னோர்களும் சொல்லவரும் செய்தியாகும்........

வளைகாப்பு_சடங்கு_செய்வதன்_அர்த்தம் ...

#வளைகாப்பு_சடங்கு_செய்வதன்_அர்த்தம் ....

வளையல் (காப்பு) கையில், மணிக்கட்டில் அணியப்படும் ஓர் ஆபரணம்
கருப்பைக்குள்ளிருந்து கதவைத்திறக்க காத்துக்கொண்டிருக்கும் குழந்தையோடு வெளியிலே இருந்தே விளித்துப் பேசும் உக்தி தான் இந்த வளைகாப்பு. நான் யார்? எங்கே இருக்கிறேன்? யாருக்குள் இருக்கிறேன்? யாரோடு இருக்கிறேன்? யாரெல்லாம் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்? என்ன நடக்கிறது என்னைச் சுற்றி? என்றெல்லாம் வார்த்தைகளே இல்லாமல் முட்டையிலிருந்து முளைத்த பச்சிளம் குழந்தை உணர்ச்சிப்பூர்வமாக உள்ளுக்குள்ளிருந்தே கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கு வெளியே இருந்து பெரியோர்களால் வெளிப்படையாக கூறப்படும் பதில்களே இந்த வளைகாப்பு!

இச்சடங்கின் போது கர்ப்பமான பெண்ணின் இரண்டு கைகளிலும் பலவை ஒலி எழுப்பக் கூடிய வளையல்களை (காப்பு) அணிவித்து ஒலி எழுப்பி பாடல்கள் பாடி மகிழ்வர்....!

நம் இந்து தர்மத்தில் எந்த ஒரு சடங்கு சம்பிரதாயங்களும் தனி ஒரு மனிதரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு கட்டாயத்தின் பெயரால் செய்யப்பட்டு வந்ததாக இருந்ததில்லை. பலரது வாழ்வில் உணர்ந்து தெளிந்த விஷயங்களை உளப்பூர்வமாக ஆராய்ந்து அது சரியென ஒருங்கே எல்லோருமாய் உணரும் போது அது சடங்காக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு ஒவ்வொரு பெரியோர்களும் வாழ்ந்து பார்த்து கடைபிடித்த சடங்கே வளைகாப்பு அல்லது சீமந்தம்.

பொதுவாக கர்பினிப்பெண்களுக்கு வளைகாப்பு சடங்கு கர்பம் தரித்து ஆறாவது முதல் எட்டாவது மாதம் வரை அவரவர் குடும்ப வழக்கப்படி நடத்தப்படுவதுண்டு. காரணம் ஆறாம் மாதம் முதல் ஒரு ஜான் குளத்தில் கவலையின்றி நீந்திக்கொண்டிருக்கும் குழந்தை வெளியுலக விசித்திரங்களை கவனிக்கத் துவங்குகிறது. உஷ்ணம், குளிர், சப்தம் என்று தன்னைச் சுற்றி நடக்கும் சகல விஷயங்களையும் குழந்தை கவனிக்கத் துவங்குவது அந்த மாதத்தில் இருந்து தான். எட்டாம் மாதம் முதல் கருவிலிருக்கும் குழந்தை நன்றாக கேட்க துவங்குகிறது.

நம் கலாச்சாரத்தில் எந்த ஒரு துவக்கத்தையும் முடிவையும் முத்தாய்ப்பாக நினைத்து கொண்டாடுவது வழக்கம். கருவாய் உருவாகி உதிப்பது முதல் உருவற்று அழிந்து நீர்த்துப்போகும் மறைவு வரை அத்தனையையும் தெய்வீகமாக நினைத்து கொண்டாடுவதே
நமது பழக்கம். ஏனெனில் நாம் எதையும் முழுவதுமாக முற்றுப்பெறுவதாக நினைப்பதில்லை.

அது போல ஒரு குழந்தை முதன் முதலாக உலகை கவனிக்கும் தருணத்திலேயே அதன் கவனத்தை அந்த துவக்கத்தை வளைகாப்பு நடத்தி வரவேற்கிறோம். உன்னைச் சுற்றி நாங்கள் தான் இருக்கிறோம். உன் வரவை எதிர்பார்த்து உனக்காகவே காத்திருக்கும் உனது உறவுகள் நாங்கள் இருக்கிறோம் என்று குழந்தைக்கு உறுதி கூறும் சடங்கு தான் வளைகப்பு.

சில குடும்பங்களில் கர்பினிப் பெண்ணின் வயிற்றை விளக்கேற்றி ஆராத்தி எடுப்பார்கள்! காரணம் இருட்டுக்குள் இருக்கும் குழந்தைக்கு வெளிச்சம் காட்டி இதோ நாங்கள் தான் உனது உறவுகள். நன்றாகப் பார்த்துக்கொள். நீ வெளியே வந்தவுடன் உன்னை வரவேற்கப்போகும் சொந்தங்கள் நாங்கள் என்பதை உள்ளே இருக்கும் குழந்தைக்கு உறுதிப்படுத்தும் விதமாக சடங்கு செய்வார்கள். விளக்கொளி குழந்தைக்குத்தெரியுமா? தெரியும், தாயை பாதிக்கும் ஒளி, உஷ்ணம், ஒலி என எல்லாவற்றையும் குழந்தை உணர முடியும்.
மிகச் சமீபத்தில் செம்மறி ஆடோன்றில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இருந்து மெல்லிசைகளை (பியானோ இசை போன்றவற்றை) கருவில் இருக்கும் குட்டி ஆடொன்று கேட்டு உணர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது...! மனிதனின் கருப்பையும் ஆடுகளின் கருப்பையும் அமைப்பில் கிட்டத்தட்ட ஒத்தவையாக இருப்பதால் இதே நிலை மனித சிசுவிற்கும் உறுதிப்படுத்தக் கூடியதே....!

தாயின் கருவறையில் இருக்கும் போதே குழந்தை கேட்டல் திறனை விருத்தி செய்யத் தொடங்குவதாகவும் தாயின் குரல் என்பவற்றை அடையாளம் கண்டு கொள்வதாகவும் இவ்வாய்வு கூறுகிறது....! அதேவேளை உயர் அளவு சத்தங்கள் கருப்பைச் சுழலில் நுண் அதிர்வுகளை ஏற்படுத்துவதுடன் சிசுவின் கேட்டல் திறனையும் பாதிப்படையச் செய்ய சாத்தியம் இருக்கின்றது எனவும் குறிப்பாக அதிகம் இரைச்சல் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் கர்ப்பிணிகளின் குழந்தைகள் இதனால் பாதிப்படைய சாத்தியம் இருப்பதாகவும் முன்னர் கருதப்பட்டது இருப்பினும் சிலவகை உயர் சத்த அலைகள் கருப்பைச் சூழலினால் வடிகட்டப்படுவதும் இவ்வாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது....!

மிகப்பலகாலமாக இந்த பூமியின் பழங்குடி மக்களாகிய இந்துக்கள் அதாவது நாம் கடைபிடித்து வரும் சம்பிரதாயங்களை எல்லாம் பார்த்து அவற்றை பற்றி ஆராச்ச்ய் செய்யும் வெள்ளையர்கள் சில முடிவுகளைக் கூறுகிறார்கள். அவற்றை கொஞ்சம் வரிசைப்படுத்தினால் நீங்கள் எளிதாகப் புரிந்து கொள்ள சவுகரியமாக இருக்கலாம். இனி அவை!

1. கருவிலிருக்கும் போதே குழந்தைகள் சப்தங்களை கவனிக்கின்றது. அதீத சப்தத்தால் சில சமயங்களில் பாதிக்கப்படுவதும் உண்டு.

2. கருவிலிருக்கும் குழந்தையால் இசையைக் கேட்கமுடியும். ஒரு வயலின் வாசிப்பை விட ட்ரம்ஸ் வாசிப்பின் அதிர்வலைகளை குழந்தை எளிதில் உணர்கிறது.

3. கருவிலிருக்கும் குழந்தை தாயின் குரலையும் இதர சப்தத்தையும் சரியாக பிரித்துப் பார்த்து அறிந்து கொள்கிறது.

4. அமைதியான ஒரு இடத்தில் வாக்குவம் க்ளீனரின் சப்தம் முதல் பக்கெட்டில் தண்னீர் கொட்டும் சப்தம் வரை குழந்தையால் கவனிக்க முடியும்.

5. மனிதக் குரல்களின் மூலமாகவே வெளி உலகை குழந்தை பரிச்சியம் செய்து கொள்கிறது.

6. மற்ற சப்தங்களை விட தாய் மற்றும் தந்தையின் குரல்களை இயற்கையாகவே குழந்தை அடையாளம் கண்டு கொள்கிறது.

7. ஃப்ளாஷ் லைட் அடிக்கப்படும் போது குழந்தை அதனை எதிர் கொள்ளும் முகமாக அசைவதை ஆராய்ச்சிகளின் போது பல தாய்மார்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

இப்படி பல ஆராய்ச்சிகள் மூலம் வெள்ளையர்களால் இன்று கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும் விஷயங்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நமது முன்னோர்கள் சடங்குளாக கடைபிடித்து கருவிலிருக்கும் போதே புதிதாக வரப்போகும் ஜீவனுடன் உரையாடி உறவாடிப் பழகியிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியம் தான்.

ஆம் அப்படி ஒரு நுட்பமான விஷயத்தை வாழ்ந்தறிந்து கருவிலிருக்கும் குழந்தையோடு எப்படிப்பழகினார்கள் என்பதற்கு சான்று மகாபாரதத்தில் கூறப்படும் அபிமன்யுவின் கதையே சான்று.

மகாபாரதப் போர் துவங்கியபோது, அர்ஜுனன் மகன் அபிமன்யுவுக்கு பதினாறு வயது. அபிமன்யுவும் போரில் ஈடுபட்டான். “கௌரவர்களின் சக்கர வியூகத்தை என்னால் உடைத்துக்கொண்டு போக முடியும்“ என்று கர்ஜனை செய்தவாறு உள்ளே நுழைந்து போரிட்டான். எதிரிகளை, எல்லோரும் வியக்கும்படி சின்னா பின்னமாக்கினான். ஆனால் உள்ளே போன அவனுக்கு வெளியே வரத் தெரியவில்லை; மாண்டான்.

சக்கர வியூகப் போர் முறையை யாருமே அவனுக்குக் கற்றுக்கொடுக்கவில்லை; வியூகத்தை உடைத்துப் போவதை எப்படிக் கற்றான்? வெளியே வரும் முறையை ஏன் கற்கவில்லை?

அர்ஜுனன் கருவிலிருக்கும் போதே தன் மகனுக்கு போரின் போது சக்ரவியூகத்தை உடைத்து உள்ளே செல்வது எப்படி என்கிற வித்தையை வெளியிலிருந்து பேசிப்பேசியே கற்றுக்கொடுத்து இருக்கிறான். சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே செல்ல கற்றுக்கொடுத்த அர்ஜுனன் அதிலிருந்து மீண்டு எப்படி வெளியேற வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்காமல் போய்விட்டான் என்கிறது பாரதம். ஆகவே அதை மட்டும் குழந்தையான அபிமன்யூ கற்றுக் கொண்டிருக்கிறான்!

அதெப்படி முடியும் என்று குதர்க்க கேள்வி கேட்பவர்கள், இன்று உலகம் முழுவதும் நடந்து வரும் கருவிலிருக்கும் குழந்தைக்கு பாடம் சொல்லித் தருவது பற்றிய ஆராய்ச்சியை உற்று நோக்கினால் விடை கிடைக்கும். கருவிலிருக்கும் குழந்தைக்கு பாடம் நடத்தும் பயிற்சி வகுப்புகளும் நடந்து வருகிறது. கர்பினிப்பெண்கள் தங்கள் குழந்தைகள் பிறக்கும் பொழுதே புத்திசாலியாகப் பிறந்து உலக ஓட்டத்தில் ஜெயிக்க வேண்டும் என்ற ஆவலோடு இது போன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள்.

இது போன்ற தற்காலச் சான்றுகளே மகாபாரத அபிமன்யூவின் சக்கர வியூகப்பயிற்சி பொய்யில்லை என்பதை நிரூபிக்கப் போதுமானதாகிறது. நமது இதிகாசங்களையும் சம்பிரதாய சடங்குகளையும் கேலிக்குரியவைகள், மூட நம்பிக்கைகள் என்று சித்தரிப்பவர்கள் அதையே வெள்ளைக்காரன் வேறு பெயரில் எடுத்துச் சொல்லும் போது கேட்டுவிட்டு மண்டையாட்டுகிறார்கள் என்பது பரிதாபத்திற்குரிய நகைச்சுவை.

ஆக கருவிலிருக்கும் குழந்தை என்பது குடும்ப பட்ஜெட் போதவில்லை யென்பதால் கலைத்து விட்டுப் போகும் வெறும் சதைப்பிண்டம் அல்ல. அது ஒரு உயிர். நம்மோடு வாழ, நம்மவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் நம்மை நாடி வந்து கொண்டிருக்கும் ஒரு ஜீவன். இந்த உன்னதத்தை உணர்ந்த நம் தாய்மார்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடிக் கொண்டாடி மகிழ்ந்ததே வளைகாப்பு என்கிற சீமந்தச் சடங்கு என்றால் மிகையாகாது. எனவே நமது தாய்மார்கள் காலங்காலமாக கடைபிடித்து வரும் அறிவியல் மற்றும் மனோவியல் ரீதியான அற்புதாமன சடங்கை மதித்துப் போற்றி பாதுகாப்போம்.

வரப்போகும் உயிர்களை குதூகலமாக வரவேற்க தயாராவோம்.

வளர்பிறை பஞ்சமியன்று, நக்ஷத்ரம், நாள் நன்கு அமைந்தால் மிகவும் உகந்தது. அல்லது வளர் பிறையில் நல்ல நாளாகத் தேர்ந்தெடுக்கலாம்.

காலையில், மங்கள ஸ்னானம் செய்யவேண்டும். 9 கெஜம், உடுத்தி வளை அடுக்குவது வழக்கம்.

சில குடும்பங்களில் வளைகாப்புக்கு வாங்கின புடவை உடுத்திக் கொள்ளுவதும் உண்டு.

முன்பெல்லாம், மசக்கைக்கு கறுப்பு நிறப் புடவை வாங்குவார்கள். தற்போது, வளைகாப்புக்கு, வாங்குகிறார்கள். இதெல்லாம், அவரவர் இஷ்டத்தையும், சௌகரியத்தையும் பொறுத்தது.

கோலம் போட்ட மணை அருகில், விளக்கு ஏற்றி வைத்து, தட்டில், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பழம், சர்க்கரை, கல்கண்டு எடுத்து வைக்கவும்.

மணையில் கிழக்கு நோக்கி உட்கார வைக்கவும்.

நாத்தனார் பக்கத்தில் இருந்தால், அவர் மாலை போடலாம்.

சில குடும்பங்களில், வளைச்சட்டியை வளை அடுக்கச் சொல்லுவார்கள். அன்று அவர் தாய் மாமனுக்கு சமானம்.
இல்லாவிட்டால், ஒரு கைக்கு அம்மாவும், மற்றொரு கைக்கு மாமியாரும் அடுக்குவது சில வீடுகளில் வழக்கம்.

இருவரும் அந்த நேரம் இல்லாவிட்டால், வயதில் பெரியார்கள் யார் வேண்டுமானாலும் அடுக்கலாம்.

முதலில், குல தெய்வத்திற்கும், கோவிலில் அம்மனுக்கு சாத்துவதற்கும், சிவப்பு, பச்சை நிற வளைகள் 5, 5 எடுத்து சுவாமி சன்னிதியில் வைக்கவும். சில குடும்பங்களில், கன்னிப் பெணகள் தவறிப்போயிருந்தால், அவர்களை உத்தேசித்து எடுத்து வைப்பதும் உண்டு.

இடதுகைக்கு ஒற்றைப் படையும், வலது கைக்கு இரட்டைப் படையும் அடுக்க வேண்டும், (14, 15 - 21, 22)

முதலில் வேப்பிலைக் காப்பு போட வேண்டும். பொன் கப்பு, வெள்ளி காப்பு போடவேண்டும்.

கடைசியில், கொலுசு வளையோ அரக்கு வளையோ சற்றே சிறிய அளவில் போட்டால், வளைகள் ஓடாமல் இருக்கும்.

மணையில் இருந்து எழுந்ததும் சபைக்கு ஒரு நமஸ்காரம் பொதுவாகப் பண்ண வேண்டும்.

அந்த மணையில், கல்யாணம் ஆகி, கர்ப்பமாகாமல் இருக்கும் ஒரு பெண்ணுக்கு, மறு மணை என்று சொல்லி, வளை அடுக்குவது சம்பிரதாயம்.

அதற்குப் பின் ஏற்றி இறக்குவது வழக்கம்.

ஒரு (அளக்கும்) படியில் நிரம்ப நெல் போட்டு, அதில் ஒரு சிறிய விளக்கை ஏற்ற வேண்டும்.

பெண்ணின், உச்சந்தலை, 2 தோள் பட்டைகள், 2 உள்ளங்கைகள், 2 பாதங்கள், வயிற்றில், இடுப்பில், ஒவ்வொரு வெள்ளி நாணயம் வைக்க வேண்டும். ஒவ்வொருவராக 5 சுமங்கலிகள், பென்ணுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, காலில் நலங்கு வைத்து, தலியில் பூ வைத்துப், படியால், மேலிருந்து பாதம் வரை ஏற்றி இறக்க வேண்டும்.
மூன்று முறை வலமாகவும் பின் இடமாகவும், சுற்றி கீழே வைக்கவும். பிறகு பென்ணை நமஸ்காரம் பண்ணச் சொல்லி, குனிந்ததும், இடுப்பில், பூவும் அக்ஷதையும் கலந்து தெளிக்கவேண்டும். இதற்கு அச்சுதம் தெளிப்பது என்று பெயர்.

பின்னர் ஆரத்தி எடுக்க வேண்டும்.

வந்தவர்கள் எல்லோர்க்கும் வளை கொடுப்பது வழக்கம்.

5 வித பக்ஷணங்கள் செய்ய வேண்டும்.

ஒரு ஜோடி பருப்பு தேங்காய், வறுபயறு (பொரிகொள்ளு அல்லது வரவரிசி), திரட்டு பால் தவிர ஒரு உப்பு பக்ஷணமும், ஒரு ஸ்வீட்டும் செய்யலாம்.

வந்தவர்களுக்கு வெற்றிலை பாக்குடன் சிறிது வறுபயறு கொடுப்பது வழக்கம்.

சாப்பட்டிற்குச், சித்திரான்ன வகைகள் செய்ய வேண்டும். வளைகாப்புப் பெண் சாப்பிட உட்கார்ந்ததும், அந்தப் பெண்ணின் மடியில், ஒரு மிகச் சிறிய ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும் உட்கார்த்தி, ஒரு அப்பளத்தில், சிறிது சாத வகைகளை வைத்துக் கொடுப்பதும் உண்டு .

மாலையில், மணையில் வைத்துப் பாடுவது அவரவர் ஸௌகரியத்தைப் பொறுத்தது.

மாமியாரோ, மற்ற புக்ககத்து உறவினர்களோ வந்தால், பணமோ, ரவிக்கைத் துணியோ கொடுப்பது வழக்கம்.
அவரவர் வசதியைப் பொறுத்து செய்யலாம்.




------ முகநூலில் படித்து.