புதன், 16 நவம்பர், 2016

எந்த ஆணிலும் இல்லாத ஒன்று.....




எனக்கான பாதையில் பயணிக்கையில் தான்
எல்லாமே கிடைக்கிறது..
எனக்கான இன்பங்களும்
எனக்கான துயரங்களும்
எனக்கான அன்புக்களும்
எனக்கான துரோகங்களும்
எனக்கான ஆறுதல்களும்
எனக்கான வசவுகளும்..

எதற்காகவும் நின்று பதில் சொல்லாமல்
நேரம் மிச்சப்படுத்தி
பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது

நான் வீழ்ந்து விடாதவன் அல்ல..
எனக்கும் வீழ்ச்சிகள் உண்டு..
ஆனால்
வீழ்வதில் இருந்து எழுவதில் தான்
என் எதிரிகளின் பயத்தை பார்க்கிறேன்..

நான் வீழ்ந்து விடுகிறேன்
பிறர்பால் கொண்ட நம்பிக்கையில்..
நான் எழுந்து விடுகிறேன்
என்பால் கொண்ட நம்பிக்கையில்..

என் பாதையின் மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லை..
என் இலக்கின் மீதே என்னுடைய கண்கள்..
பாதைகள் மாறினாலும் இலக்குகள் மாறவில்லை..

ஆகச்சிறந்தவனாய் அல்ல..
எனக்கு பிடித்தவனாய் நடக்கிறேன்
கலங்கலான நினைவலைகளும்
என்னை தொட்டுப்போவதுண்டு..

இருளடர்ந்த பாதையில்
இன்பங்கள் தேடியோடும் வேளையிலும்
யாருக்கும் ஒரு துளியும்
துன்பங்கள் தராமல் இருப்பது தான்
மனதின் கட்டளை..

பயணிக்கிறேன்...
எனக்கான கடைசி மணித்துளிகளிலும்
எல்லோரும் இன்புற்றிருக்க விழையும்
பேராசையுடன்..


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: