வியாழன், 15 செப்டம்பர், 2016

அப்பா...

அப்பா...
எங்களை கடந்து சென்று விட்டீர்கள்..
ஆனாலும் பிரியாமல் எங்கள் நெஞ்சங்களில்
உங்களுக்காக எதுவும் செய்ததில்லை..
உங்கள் நினைவுகளை சுமப்பது தவிர..

புன்னகைக்கும் உங்கள் மலர்ந்த முகம் இன்னும் மனதோடு..
உங்கள் ஆசிகளே என் வழிகாட்டுதலாக..
பலன் நோக்கா கடமை செய்வதில் உங்களில்
சிறிது கூட நானில்லை..

காலம் பல கரைந்தோடி போனாலும்
என்றும் மங்காது உங்களின் நினைவுகள்..

அப்பா..
உங்கள் புன்னகையே என் சொத்தாக..
உங்கள் அன்பே என் வழியாக..
உங்கள் பாசமே என் பரிசாக..

புரட்டிப்போடும் என் வாழ்க்கைப்பயணத்தில்
தடைக்கற்கள் பல வந்தாலும்
உங்கள் நம்பிக்கையை தகர்க்காமல் நடக்கிறேன்..
புரட்டிப்போடும் பேரலைகளின் இடையே....
தடம்மாறாமல் தப்பியே வந்துள்ளேன்..

விலைபேச முடியாத நேசத்தை விலைபேச
இந்த உலகம் நின்றாலும்..
கொடுங்கூற்றாய் என்னிதயம் கிள்ளிவிட
சில உறவு நின்றாலும்..
அலட்சியங்கள், ஏச்சுக்கள், ஏமாற்றம், துரோகம்
எல்லாமே பார்த்தாலும்
புரட்டு வாழ்க்கைக்கு என்னை பலியாக்க விட்டதில்லை..

உங்களின் அந்த கருணைப்பார்வை..
பரிதவிக்கும் வேதனை விழிகள்..
சோகத்திலும் புன்னகைக்கும் அந்த முகம்..
எல்லாமே எனக்கு உரைக்கிறது
நீங்கள்
சொல்லாமல் சொல்லிய வேதங்களை...

இன்னும் கடக்க வேண்டிய பாதையும்
சந்திக்க வேண்டிய கடமைகளும் நீண்டிருக்க..
எல்லாம் வெற்றி கொள்ள
நினைத்ததை வென்று முடிக்க..
உங்களின் மனமுவந்த ஆசி வேண்டி
என் கண்ணீர் பூக்களை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்...


என்றும் உங்கள் நம்பிக்கையில் வாழும் மகன்.... சங்கர்

கருத்துகள் இல்லை: