செவ்வாய், 20 செப்டம்பர், 2016

மனைவியின் மனதில் இடம் பிடிக்க....- 2

மனைவியின் மனதில் இடம் பிடிக்க....

கரம்பிடித்த மங்கை நல்லாள்
மனம் மகிழ வாழ்ந்திடுதல் உன்கடனே தோழா....
நம்பி வந்தாள் நங்கையவள் உன்னையே..
நம்பிக்கை நண்பனாய் நீ வாழ்ந்திடு....
துன்பங்கள் வருகையில் துயர்துடைக்கும்
துணைவனாய் தோள்கொடு..
இன்பங்கள் இனிமைகள் நிறைந்திடும் நேரத்தில்
பாதியாய் அவளில் கரைந்தே நிறைந்திடு..
பின்னொன்று சொல்லமால்
முன்னொன்று செய்யாமல்
வார்த்தைகளில் கவனமுடன்
கண்ணியமும் காத்து அவள் கண்களாய் இருந்திடு..
நீ நினைக்கும் வழியுமில்லை..
அவள் நினைக்கும் வழியுமில்லை..
இணைந்தே பயணத்தை இனியதாக்கிடு.....
உயிருக்குள் உயிராகி
இரண்டிங்கே ஒன்றாகி இருக்கையிலே
இரண்டு மனம் என்ற பேதம் வேண்டாமே..
இரண்டு மனம் இல்லையென்றால்
ரகசியங்கள் ஏது அங்கே..
ரகசியங்கள் இல்லையென்றால்
வாழ்வில் தொல்லைகளும் ஏதுமில்லை.
கணவனாய் மனைவியாய் கட்டுக்குள் அல்லாமல்..
புரிந்துகொண்ட புள்ளினத்தின் காதலாய்..
கரைந்திடும் மெழுகாய்..
ஒளிர்ந்திடும் அகலாய்...
வாழ்ந்திட வாழ்க்கையும்
பௌர்ணமி நிலவாய் குளிர்ந்திடும்..


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: