வெள்ளி, 22 ஏப்ரல், 2016

** முள் **



கடந்துபோன இனிய நாட்களின்
நினைவுகள் முள்ளில் மலர்ந்த
ரோஜாவாய்  மெல்ல பூக்கிறது..

மலர்பாதைகளில் அல்லாமல்
முட்காட்டின் வழியே
பயணங்கள் அமைந்தாலும்
இதமும் பதமுமான வார்த்தைகள்
வலிகளை மறந்து வசந்தத்தை
சுவாசிக்க வைகிறது..

நொடிகளாய் மெல்லக்கடக்கும்
காலச்சக்கரத்தில் எழும்
மாற்றங்களும் கணிக்க முடியாததல்ல..

எதிர்பார்ப்புகள் நிராசையாக..
ஏமாற்றங்கள் ஏக்கத்தை தூண்ட
கோபங்கள் குணத்தை கொல்லுகிறது..

தேனான வார்த்தைகள் எல்லாமே
அமிலத்தில் தோய்த்து முட்களோடு
பிறர்மீது முலாம் பூசப்படுகிறது..

முட்களாய் குத்தம்
ஒவ்வொரு வார்த்தையும்
உயிரின் உணர்சிகளை
கொல்லாமல் அறுக்கிறது..

இனிய வார்த்தைக்காய் காத்திருந்த மனது
இன்று மௌனத்திற்காய் தவமிருக்கிறது..

திட்டமிடா போர்முனையில்
பாய்ந்துவரும் ஈட்டிகள் போல
எதிர்பாரா நேரத்து வார்த்தை சிதறல்கள்
எரியும் கொள்ளியாய்
நெஞ்சை துளைக்கிறது..

அன்பின் ஆயுதங்கள்
போலிகளின் முன்னே கூர்மழுங்கி
குப்பையில் குவிந்து விடுகிறது..

கொட்டிவிடும் வார்த்தைகளை
அள்ளி அழிக்க முடிவதில்லை
சொல்லிவிட்ட  வார்த்தைகளை
இங்கு சுமப்பது காய நெஞ்சமே..

ஆறாத வார்த்தை காயம்
தீராது வாழ்வு மட்டும்..

போராட்டங்களை துரும்பென தாண்டினாலும்
நெருஞ்சி முள்ளாய் சிதறும்
வார்த்தைகள் முன்னே
கேடயமின்றி சிதறிப்போகிறோம்..

காலங்கள் மாறிவிடும்
எல்லாமும் மாறிவிடும்..
முட்களாய் சுட்ட வார்த்தைகளின்
தீக்காயங்கள் இந்த மண்ணோடு மண்ணாய்
தேகம் அழியுமட்டும் இருந்து மெல்ல
அரித்துக்கொண்டே இருக்கும்..

கருத்துகள் இல்லை: