புதன், 13 ஏப்ரல், 2016

எனக்குள் இருக்கும் நீ..

கோடையில் விழும் மழைத்துளியாய்
உன் புன்னகை
என்னை கொஞ்சம் உயிர்க்கச்செய்கிறது..

ஏதுமறியா மழலையின் மொழியாய்
உன் சின்னச்சீண்டல்கள் என்னில்
மகிழ்ச்சி வெள்ளம் பொங்கச்செய்கிறது...

யாருமற்ற தனிமையில் நீ தந்த
அணைப்பின் சுகம்
பிரிவின் நாட்களை
தென்றலாய் உரசிச்செல்கிறது..

உன் உதட்டுச்சுழிப்பில்
தேங்கி நிற்கும் கோபச்சுவடுகள்
குளிர்தேச பனியாய் உறைந்து உருகுகிறது..

கொஞ்சமும் நில்லாது
காலங்கள் கரைகிறது..
உறங்காத பூமியோடு
விழிப்புறக்கமின்றி சுற்றுகிறோம்..
ஏதும் அறியா நாட்களை நோக்கி
வாழ்க்கையும்  ஓடுகிறது...

நீயோ என் மகிழ்ச்சியின்
திரியாய் ஒளிர்கிறாய்..
துக்கத்திலோ மெழுகாய்
உருகி ஒளிர்விக்கிறாய்..

தலைகோதி மெல்ல அணைக்கும்
உன்  பாச அணைப்பிலும்.
என் மீசை இழுத்து கேசம்  கலைத்து
இதழ்பதிக்கும் இன்ப அணைப்பிலும்..

போதும்  போதும்..
என்னுயிர்  உருகி
காற்றோடு கலக்கும்வரை..
திகட்டாத தேன்சுவையாய்..
உந்தன் நினைவுகளை
அசைபோட்டே

என் பயணத்தை தொடர்கிறேன்..

கருத்துகள் இல்லை: