புதன், 18 ஜனவரி, 2017

எனது கிராமம்



தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒரு கிலோமீட்டர் உள்ளடங்கிய ஒரு சிறிய கிராமம் நான் பிறந்து வளர்ந்த மலைப்பாளையம். கிழக்குபுறம் கருங்குழி ஏரி தெற்கில் மதுராந்தகம் ஏரி, மேற்கில் மலை, வடக்கில் பரந்துவிரிந்திருக்கும் கிராமம். கிராமத்துக்குள் நுழையவே கருங்குழி, மதுராந்தகம் ஏரியின் இணைப்பு கால்வாயை சிறிய பாலத்தை கடந்து தான் வர வேண்டும்.

கிராமத்தை சுற்றியிலும் வயல்வெளிகள். பெரும்பாலும் ஏரிப்பாசனப்பரப்பு என்பதால் ஆடி மாதம் முதல் பங்குனி வரை விளைசல் இருக்கும்.

பல்வேறு பிரிவு மக்கள் வாழ்ந்தாலும் என்றைக்கும் ஒற்றுமையாகவே என்றைக்கும் வாழ்ந்துவருகிறார்கள். கிராமத்தில் இருக்கும் தீண்டாமை போன்றவை அங்கு கிடையாது.

பொங்கல் என்றால் போகி அன்றே கும்மாளம் தொடங்கி விடும். போகி அன்று வீட்டில் இருக்கும் குப்பைகளை கொளுத்திவிட்ட பிறகு இளவட்டங்கள் சேர்ந்து கையில் பழைய சைக்கிள் டயர் எடுத்துக்கொண்டு மலை, ஆறு என்று சுற்றிவிட்டு காலையில் விடிந்த பிறகு வீடு வந்து சேருவோம். இன்பமாக திரிந்த நாட்கள் அது.

பொங்கல் முதல் நாள் எல்லா வீடுகளிலும் கொண்டாடினாலும் சிறுவர்கள் இளைஞர்களுக்கான கொண்டாட்டம் என்பது மாட்டுப்பொங்கல் அன்று தான். அன்று காலையில் நண்பரின் வீட்டுக்கு சென்று அவர்கள் வீட்டில் இருக்கும் மாடுகளை கால்வாயில் குளிப்பாட்டி பின்னர் மாட்டுவண்டியை ஏரியில் கழுவி அப்புறம் நிழலில் எடுத்து நிறுத்தி நானும் நண்பரும் இணைத்து வண்டிக்கு வண்ணம் தீட்டுவோம்.

மதியம் மேல் மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி மாலையில் மாட்டுவண்டியில் பூட்டி குழந்தைகளை ஏற்றி ஒரு சுற்று சுற்றி வர இனிமையாய் முடியும் அன்றைய பொழுது.

மறுநாள் நண்பர்களுடன் ஊர்சுற்ற ஆரம்பித்தால் வீடு திரும்ப நள்ளிரவு ஆகிவிடும். செம கலாட்டா தான். அது எல்லாம் ஒரு கனாக்காலம். தந்தையின் மறைவுக்கு வாழ்க்கை இழுத்த திசையில் செல்லும் பயணத்தில் கிராமத்துடனான தொடர்பு முற்றிலும் அறுந்துபோனது. ஆனாலும் மனதில் அந்த கிராமத்து வாசனை இன்னும் மறையவில்லை.


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: