புதன், 1 ஜூன், 2016

துக்கங்களிலா வாழ்கிறோம்..

அந்திசாயும் வேளையிலே
மறைந்துவிடும் சூரியன் தான் – எனில்
சூரியோதத்தை காணாமல்
கண்மூடிக்கொள்வதா..?

தினம் வாடி மெல்ல
உதிர்ந்துவிடும் வாசமலர்கள் – எனில்
பூக்களின் சிரிப்பை
பார்க்காமல் கடப்பதா...?

வெட்டிவிடும் மின்னலென்று
வானத்தை பார்க்கவில்லை – எனில்
பூத்துக்குலுங்கும் நட்சத்திர தோட்டத்தை
ரசித்திடத்தான் முடியுமா?

மணற்பரப்பில் தேங்கி நிற்கும்
தேக அழுக்கோடு
கோடையில் வற்றிவிடும் – எனில்
நீர்ச்சுழிக்க ஆடிவரும்
ஆற்றின் அழகை சுவைப்பது எப்படி?

சருகுகள் தரைவீழ
மொட்டையாகும் மரங்கள் – எனில்
வசந்தகால குளிர் மலர்ச்சியை
மறுப்பது யாருக்கான தண்டனை..

துக்கங்களுக்காக சிந்த மட்டுமா
கண்ணீர் துளிகள்..?
நமது சந்தோஷ பெருக்கில் – அது
அருவியாய் கொட்டட்டுமே...!

தேகம்விட்டு நாசிவழி
வெளியான மூச்சுக்காற்றும் நின்றுவிட..
சுழல்கின்ற நேரத்திலே சென்றுவிட்ட
மணித்துளிகள் மீளாது காண்...

சொல்லமுடிய நொடியில்
சட்டென்று முடிந்துவிடும் வாழ்க்கை – எனில்
வாழ்வின் இனிமைகள் ரசிக்காமல்

துக்கங்களிலா வாழ்கிறோம்..

கருத்துகள் இல்லை: