வெள்ளி, 10 ஜூன், 2016

24. தேடல்கள்?

வலைவீசும் எண்ணங்கள்

24. தேடல்கள்?

தேடல்.. ஒருவருக்கு தேவை என்னவோ..? ஒருவருக்கு எது கடினமான செயலாக இருக்கிறதோ..? அவரின் தேடல் அந்த தேவையை நோக்கியும், செயலை எளிதாக்கும் வழியை நோக்கியுமே இருக்கிறது. வாங்களேன் நாமும்  கொஞ்சம் வலைவீசி தேடுவோம்..

தேடல்கள் என்பது என்றைக்கும் ஒரு இலக்கை நோக்கியே அமைகிறது. இலக்கு இல்ல பயணம் எங்கு செல்லும்? அது தேடலா என்றால் இல்லை என்றே அனைவரிடமும் பதில் வரும்.

ஒருவர் தன்னுடைய தேடலில் முனைப்புடன் இருக்க, அவரின் குறிக்கோளை நிச்சயம் அடைவார் அல்லது தேடலின் விடைக்கான சூட்சுமத்தை புர்ந்துகொண்டு அதை பகிர்ந்து கொள்ள.. அதே தேடல் கொண்டவர் அந்த சூட்சுமத்தின் வழி சென்று தேடலை கண்டடைகிறார்கள்..

நாம் இன்றைக்கு அனுபவிக்கும் பல கண்டுபிடிப்புகளும், படைப்புகளும் ஒரு சிலரின் அல்லது பலரின் தேடலின் பலன்களே..

தேகத்தில் நோயும், மாற்றங்களும் உணரும் மனிதன் அதிலிருந்து தன்னை காத்துக்கொள்ளவும், நோயிலிருந்து தப்பிக்கவும் தேடிய தேடலின் முடிவே மருத்துவ அறிவியல் என்றும் உயிர் காக்கும் வழி.

மனதில் நினைக்கும் செயலை வென்றெடுக்க முற்படும் மனிதனின் தேடல்கள் மிகவும் சுவாரசியமானது. சமயங்களில் அவன் தேடுவது ஒன்றாக  இருக்க கண்டடைவது வேறொன்றாய் இருக்கும்.

இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடிக்க தன்னுடைய தேடலை தொடங்கிய கொலம்பஸ் கண்டுபிடித்தது அமெரிக்க கண்டம்.

1907ம் ஆண்டில் Leo Baekeland என்பவர் அரக்கு (Shellac) எனப்படும் ஒருவகை இயற்கைப் பிசினுக்கு பதிலாக செயற்கை பிசின் உருவாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். ஆனால், அவர் அந்நேரம் கண்டுபிடித்தது செயற்கை பிசின் அல்ல! தற்செயலாக நெகிழி எனப்படும் பிளாஸ்டிக்கை உருவாக்கி விட்டார். இவரின் இந்த மாபெரும் கண்டுபிடிப்பால் இன்று எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் காணமுடிகிறது.

அரசன் கொடுத்த கிரீடத்தில் கலப்படம் உள்ளதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற தேடலின் சிந்தனையில் இருந்த ஆர்க்கிமிடிஸ் அதற்க்கான வழி அறிந்ததும் கொண்ட உற்சாக கதையை நாம் அறிவோம்.

திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்ற நமது தமிழ் பழமொழிப் படி திசையறியா நாடுகளை எல்லாம் கண்டறிந்து கடல் தாண்டி தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டி பொருள் தேடி நாட்டை செழிக்க வாய்த்த தமிழ் மரபினரின் தேடல் அதிசுவாரசியமானது.

உலகில் நமது தேடல்கள் தான் நமது திசைகளையும் தீர்மானிக்கிறது. இன்பத்தின் தேடல் கலைகளையும், கலைகளின் மீதான தேடல் ஆழ்ந்த நுட்பங்களையும், நுட்பங்களின் மீதான மோகமும், கடும் தேடலும் நவீனங்களை நமக்கு தந்திருக்கிறது.

எவ்வளவோ தேடல்கள் இருந்தாலும் இன்றைக்கு நம் அனைவரின் தேடலின் புள்ளியும் முதலில் ஆரம்பிப்பது பொருள் தேடலிலும் பின்னர் பொருளை போதுமான அளவு சேர்த்ததும் அந்த தேடல் நிம்மதியை நாடியும் திசை மாறுகிறது.

இந்த நிம்மதியை நோக்கிய தேடலின் விடை தான் கடவுளை அடைய செய்கிறது. கடவுள் எல்லோர் மனதின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை ஆழமாக இருக்கும்போது மனிதன் தன் பாரங்களை இறைவனின் மீது இறக்கி வைத்து நிம்மதியை அடைகிறான்.

பண்டைய மக்களின் தேடலில் கிடைத்த அளப்பரிய சாத்திரங்கள் தான் இன்றைக்கு நமது தேசத்தின் மிகப்பெரிய பண்பாடு சொத்து. காலத்தால் அழியாத திருக்குறளும், அளப்பறியா கருத்துக்களை கொண்ட வேதங்களும் உலகில் எந்த நாட்டில் இருக்கிறது?

ஆதியில் மனிதன் தன் பயத்தை தீர்க்க தேடிய தேடலின் முடிவாக இயற்கையை படைத்தல், காத்தல், அழித்தல் என்று பாகுபடுத்தி அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயரிட பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற கடவுளின் தோற்றம் நிகழ்ந்தது.

இந்த முத்தொழில் தான் கிருஸ்துவ வேதத்தில் படைத்தல், காத்தல் போன்றவற்றுக்கு பிதாவாகவும், குமாரனாகவும், பரிசுத்த ஜீவனாகவும், அழித்தலுக்கு சாத்தானகவும் உருவகம் தரப்பட்டுள்ளது.

இந்திய வேதத்தில் மும்மூர்த்திகளுக்கு மேலான பரம்பொருள் ஒன்றும் இருபதாக கருத்துக்கள் உண்டு.

இதை விளக்க ஒரு கதை உள்ளது... மும்மூர்த்திகள் அவர்களுக்குள் பெருமைப்பட்டு பேசிக்கொண்டு இருக்கும்போது ஒரு சிறுவன் தோன்றி ‘உங்கள் தொழில் என்ன? என்று மூவரிடமும் கேட்க அவர்கள் தங்களின் பிரதாபங்களை சொல்லுகிறார்கள்..

அந்த சிறுவனோ பற்குச்சி அளவு கொண்ட துரும்பை தன் கையில் வைத்திருக்கிறான். அதை காட்டி பிரம்மாவிடம் இதுபோல ஒன்றை படைத்துத்தாருங்கள் என்று கேட்க.. பலமான முயற்சிக்கு பின்னாலும் முடியவில்லை.

பின் விஷ்ணுவிடம் வரும் சிறுவன் கைநீட்டி துரும்பை பார்க்க அது மெல்ல கரைய தொடங்கும்போது “இப்போது இதை காப்பாற்றுங்கள் என்று சொல்ல..விஷ்ணுவின் முயற்சி தோல்வியில் முடிய துரும்பு மொத்தமும் கரைந்து காணமல் போகிறது.

மீண்டும் துரும்பை உருவாக்கி சிவனிடம் காட்டி, இதை அழியுங்கள் என்று சொல்ல எவ்வளவு பிரயத்தனம் செய்தும் துரும்பில் சிறு பகுதியையும் அழிக்க முடியவில்லை.

பின்னர் பிரம்மாவிடம் திரும்பியா சிறுவன்,என்னை என்னை படித்தீர்களா? என்ற கேள்வியை கேட்க... பலமாக யோசனை செய்து பலவற்றை ஒப்பிட்டுப்பார்த்தும் இந்த சிறுவனை படைத்த ஞாபகமே அவரின் சிந்தையில் வரவில்லை.

சிறுவனோ திடீரெண்டு மறைந்து போனான். பின்னரே மும்மூர்த்திகளும் தங்கள் மாயையில் இருந்து விடுபட்டு தாங்களுக்கும் மேலே ஒரு பெரும் சக்தி இருப்பதை அறிந்தனர்

இந்த கதை பரமஹம்ச யோகானந்தர் எழுதிய “மனிதனின் நிரந்தர தேடல் என்ற நூலில் உள்ளது.

மனிதன் எதை எதையோ தேடினாலும் அவனின் நிரந்தர தேடல் ஆன்மாவை அடக்குவரும், ஆன்மாவை உணருவதும், ஆன்மாவை அமைதி படித்டுவதும் ஆகும். அதற்குரிய வழியே கடவுள் நம்பிக்கை, வழிபாடு, தானதர்மங்கள் என்று பல வழிகள்.

இனிய வணக்கங்கள்.... அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.


கருத்துகள் இல்லை: