வியாழன், 16 ஜூன், 2016

முழுமையடையாத சிற்பமாய்

செதுக்க செதுக்க
இன்னும் முற்றுபெறாத
ஒழுங்கற்ற சிலை நான்....

தாய் தந்தை பாராட்டு உளிகள்
மனதில்
அன்பு பாசம் நேசம்
நம்பிக்கை நன்றி
வடிவத்தை என்னில் ஆழ செதுக்கியது...

வாழ்வின் தனிமையில்
நட்புக்கள் புரிதல் உளிகளால்
என் பாதையை மாற்றாது புதுபலத்துடன்
என்னை செதுக்கின..

என்னில்.....
காலத்தாலும் செதுக்க முடியவில்லை
கடந்து சென்ற சிற்பிகளாலும்
பதிக்க முடியவில்லை..
துரோகத்தின் வேர்களை..

என் மேல் விழுந்த
துரோக உளிகளின் அடிகள்
என்னில் ஆழப்பதியவிடாமல்
விலக்கி நின்றேன்..

நான் கடந்த
புத்தகங்களும்
படித்த நெறிகளும்
நம்பிக்கை வார்த்தைகளும்
உடனிருக்கும் அன்பின் பிறப்புகளும்
இன்றும் என்னை செதுக்குகிறது..

சிலரிடம் நம்பிக்கையின் உளிகளை தந்து
செதுக்க அனுமதித்தபோது
அவர்கள்  என் நெஞ்சை துரோகத்தின் உளிகளால்
சிதைக்கும் முயற்சியில்
என் மன்னிப்பின் உளிகளை கொடுத்து
கடந்து போக சொன்னேன்..

என்னை முழுசிற்பமாகும் முயற்சியில்
எந்த உளிகளாலும்
என் அன்பின் நம்பிக்கையை
உண்மையின் பார்வையை
சிதைக்க முடியவில்லை....

ஆம்... 
அவைகள் ஆதியிலேயே
மிக அற்புதமானவர்களால்
மிக அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளது..

இருந்தாலும்.......
இன்னும் முழுமையடையாத சிற்பமாய்
நான்...
முழுமையாக்கும் சிற்பிக்காய் நான்...



கருத்துகள் இல்லை: