வியாழன், 2 ஜூன், 2016

வேகம்..வேகம். வேகம்..


எண்ணங்களை கடைந்து
வண்ணங்களை தூவி
கை தூரிகை படைக்கும்
ஓவியத்தில் இருக்கும் நிதானமும்..

ஓவியத்தை நோக்குங்கால்
கற்பனை சிறகு கட்டி..
காலவெளிகளை
கண்ணிமைக்கும் நாழிகையில்
கடந்துவிடும் மனதின் வேகமும்...

ஒன்றிணையா பெருவெளியின் ஓட்டம்..

நேற்றிருந்த துயரத்தின் பயணம்..
மெல்ல குறைந்திருக்க..
உதடுகளில் பூக்கின்ற புன்னகையில்
ஓடிவரும் மகிழ்ச்சி – அது
அமைதி நெஞ்சின் வெகுமதியாம்
மறதியின் வேகம்..

துஞ்சுங்கால் கனவுகள் இனிக்க..
விழி திறக்குங்கால் ஓடிவந்து
வாட்டும்
சுமைகளின் வேதனை..
மன சஞ்சலத்தின் வேகம்..

யோசிக்கையில்
பாதகம் நோக்கும் மனதின் வேகம்..
பார்க்கையிலே
மோதும் விழிகளின் வேகம்..
வாசிக்கையில்
மோதும் அறிவின் வேகம்..
செயலென வருகையிலோ
புயலின் வேகம்..

இதுதான் வாழ்க்கையில்
வெல்லும் வேதம்..

கருத்துகள் இல்லை: