வெள்ளி, 25 மார்ச், 2016

** எங்கே போகிறோம் **



எங்கே போகிறோம்
எந்த திசையில் போகிறோம்
எதற்காக போகிறோம்
ஏதும் அறியா நீண்ட பயணம்..

இலக்கில்லா பயணமாய்
நீள்கிறது மண்ணில் நமது பாதை..
திசையறியாது காற்றாய் கடக்கிறது
நமது வாழ்க்கை..

காலவெளி எங்கும் கால்பதிக்க
இருக்கும் காலடியில்
குழிதோண்டி பயணிக்கிறது மனிதம்..

இயற்கையின் கொடையினை
சுயநல செயலால் சுடுகாடாக
மாற்றி பயணிக்கிறது மனிதம்..

ஒரு விதையையும் உருவாக
நாதியில்லா மனிதம் தான்
மரபுகளை மாற்றுகிறது...

மண்ணை படைத்திட வழியில்லா
மனிதம் தான் நெகிழியால்
மண்ணின் குரல்வளை நெரிக்கிறது..

ஒரு சொட்டு நீரையும்
உருவாக முடியாத மனிதம் தான்
உலகின் நாடி நரம்பாம்
ஆறுகளை அறுக்கிறது..

காணும் இடமெல்லாம்
மாசுக்களை தூவிவிட்டு
முகத்திரையோடு பயணிக்கிறது..

வாழ்ந்திட மற்றதை சார்ந்தே
இருப்பது மண்ணின் தத்துவமே..
தான் பிழைத்திட எல்லாம்
அழித்திட நினைப்பது
மனிதனின் சாத்திரமே..

கருத்துகள் இல்லை: