திங்கள், 14 மார்ச், 2016

பகிர்தலும் மகிழ்ச்சியும்

ஒரு பெரிய அரங்கத்தில் சொற்பொழிவு நடந்துகொண்டிருந்தது. அங்கிருந்த அன்பர்கள் அனைவரும் பேசுபவர் உரையை கவனமாக கேட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது பேச்சாளர் தன் உதவியாளர்கள் மூலம் அரங்கத்தில் இருந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பலூனை வழங்கி, அதில் அவர்கள் பெயரையும் எழுத சொன்னார்.

அனைவரும் எழுதி முடித்ததும் அந்த பலூனை அருகில் உள்ள அறையில் போட்டுவிட்டு வரும்படி கூறினார். அனைவரும் அப்படியே செய்தனர்.

சிறிது நேரம் கழித்து பேச்சாளர், மக்களிடம் உங்களுக்கு ஐந்து நிமிடங்கள் தருகிறேன்..உங்கள் பெயருடைய பலூனை அந்த அறையிலிருந்து எடுத்து வாருங்கள் என்று பணித்தார். உடனே அனைவரும் விழுந்தடித்துக்கொண்டு அறைக்கு ஓடினர். அவரவர் பெயர் கொண்ட  பலூனை தேடினர். நெருக்கித்தள்ளி விழுந்து தேடினர். அதற்குள் ஐந்து நிமிடங்கள் முடிந்துவிடவே அனைவரும் அரங்கத்திற்கு அழைக்கப்பட்டனர்.

என்ன ஒரு ஆச்சரியம்..தங்கள் பெயருடைய பலூன் யாரிடமும் இல்லை. எல்லாம் வேறு வேறு பெயர் கொண்ட பலூன்களே இருந்தன.

பேச்சாளர் மீண்டும் அவற்றை அறையில் போட்டுவிட்டு வரும்படி கூறினார். அவ்வாறு செய்த பிறகு, “நண்பர்களே.. மீண்டும் அறைக்குள் போய் ஆளுக்கு ஒரு பலூன் மட்டுமே எடுத்து வாருங்கள். அதில் யார் பெயர் உள்ளதோ, அந்த நபரிடம் கொடுத்து விடுங்கள் என்றார்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் அவரவர் பெயர் எழுதப்பட்ட பலூன் அவரவருக்கு கிடைத்துவிட்டது.

அப்போது பேச்சாளர் சொன்னார்..இது தன வாழ்க்கை.. எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம்.. ஆனால் அது எங்கே, எப்படி, எதில் கிடைக்கும் என்றெல்லாம் நினைப்பது இல்லை.

உண்மையில் சந்தோசம் என்பது அடுத்தவர்களுக்கு உதவும்போதுதான் கிடைக்கிறது. எப்படி பலூனை அடுத்தவர்களுக்கு கொடுத்து நமதை பெற்றோமோ அப்படியே நீங்கள் அடுத்தவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்போது உங்களுக்கான, உங்களுடைய சந்தோசம் உங்களைத்தேடி  வரும்  என்றார்..


சரிதானே  நண்பர்களே..

கருத்துகள் இல்லை: