திங்கள், 28 மார்ச், 2016

இது மட்டும் வேண்டாமே!



திட்டமிடாத பெரும்பயணத்தின்
பாதைகள் தீர்மானிக்கப்படாத சுமைகளாக..
பாதை தவறென்றால் திசை மாற்றலாம்
மீண்டும் ஆரம்பப்புள்ளிக்கு திரும்பி
பயணம் தொடரலாம்..
தவறோன்றில் தொடராமல்..
ஆரம்பம் திரும்பாமல்
நமது பாதையை செப்பனிட்டும் முன்னேறலாம்..

வாழ்க்கை என்பது தனித்து நிற்கும்
பனையல்ல..
வேரோடு வீழ்த்து விட..
விழுதுகள் தாங்க பரந்துநிற்கும்
ஆலமரம்..

அனைத்துக்கொள்வோம்...
வாழ்வின் புரிதலை,
வாழ்க்கையின் மகத்துவத்தை
வாழ்தலின் இனிமையை

அண்ட சராசரத்தின் பால்வெளியில்
கண்ணுக்கு தெரியாத சிறு தூசு..
நமது மண்..
அதிலே வாழ்வென்பது
மின்னி மறையும் மழைக்கால
ஒளிமின்னல்..

நேசத்தை தொலைத்து
தேடும் நிம்மதியும், அமைதியும்.
அன்பை மறந்து எதற்கு
போட்டியும், பொறாமையும்
இது மட்டும் வேண்டாமே! 

சனி, 26 மார்ச், 2016

13. ரசித்து செய்வோம்

வலைவீசும் எண்ணங்கள்

13. ரசித்து செய்வோம்

அன்பு நண்பர்களே.. ஒரு செயலை நாம் விரும்பி செய்வதற்கும், பிறர் வற்புறுத்தலால் செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். நாம் நமக்கு பிடித்த ஒரு காரியத்தை செய்யும்போது கூடவே ரசனை வந்து ஒட்டிக்கொள்கிறது. அந்த ரசனையோடு ஒரு செயலை செய்யும்போது அது இனிமையாகவும் எளிமையாகவும் இருக்கும். இந்த ரசனை பற்றி வலை வீசலாம்  வாருங்கள்..

நாம் அனைவரும் நன்கு அறிந்ததும், அடிக்கடியும் கேள்விப்படுகிற ஒரு விஷயம் தான் இலக்கை நிர்ணயிப்பது (goal setting). நாமே பலருக்கு அறிவுரை வழங்கி இருப்போம். நமக்கும் அந்த அறிவுரைகள் அதிகம் கிடைத்திருக்கும்.  அதன்படியே நாமும் லட்சியத்தை அடைய தீவிரமாக முயற்சி செய்வோம். அது மனித இயல்பு. தவறில்லை. ஆனால் வெளியில் இருந்து ஒருவரின்  மூலம் கிடைக்கும் ஊக்கத்தில் மட்டுமே நம்மால் அந்த லட்சியத்தை அடைந்துவிட முடியுமா? என்றால் கொஞ்சம் சந்தேகம் தான். ஏன்? கொஞ்சம் யோசித்தால் ஒன்று நன்றாகத் தெரியும். அது தான் ரசனையின்மை. அதாங்க Passion.

அது என்ன ரசனை..????? வாழ்க்கையில் மிகப் பெரிய உயரங்களை அடைந்த பல வெற்றியாளர்களின் வாழ்க்கைப் பக்கத்தை கொஞ்சம் திருப்பிப் பார்த்தால், அதில், நமக்கு தெரியும் மிக முக்கியமான மற்றும் பொதுவான விஷயம் தான் இந்த ரசனை (Passion).

நீங்களே ஒரு பட்டியலிட்டு பாருங்கள். உங்களை சுற்றியும், இந்த உலகத்திலும் பலரையும், பல பிரபலங்களையும் பட்டியலில் காணலாம். அவர்களின் பேட்டிகளை  நாம் கொஞ்சம் கூர்ந்து படித்தால் இருக்கும் அடிப்படை ஒற்றுமை இந்த ரசனை தான். வெற்றியாளர்கள் அனைவரும் தங்கள் வேலைகளை மிகவும் பிடித்து ரசித்து அதிலேயே மூழ்கி ஒன்றிணைந்து செய்ததால் தான் அவர்களில் வெற்றிபயணம் தொடர்ந்திருக்கிறது.

இந்த வெற்றியாளர்கள் அனைவரும் குறிப்பிடும் பொதுவான கருத்து இது  தான், “உங்கள் மனதிற்கு பிடித்த ஒரு செயலை, வேலையை, விளையாட்டை உங்கள் இலக்காக, வாழ்க்கை குறிக்கோளாக எடுத்துகொண்டு செய்யும் போது அந்த செயல் என்றைக்கும் ஒரு கடினமான செயலாக இருக்காது. (“chase your passion”, “Love what you do, do what you love”, “Don’t limit your challenges, but challenge your limits”)

ஒரு சின்ன உதாரணம். நீங்கள் திங்களில் இருந்து சனி வரைக்கும் வேலை செய்தாலும் அந்த சனிக்கிழமை மாலையில் ஒரு உற்சாகம் வரும் பாருங்கள். ஞாயிறு விடுமுறை என்ற எண்ணமும் வீட்டில் குடும்பத்தோடு இருக்கலாம் என்ற எண்ணமும் தரும் உற்சாகம் அது.

அதே போல நம் பள்ளி நாட்களை கொஞ்சம் நினைவுக்கு கொண்டு வருவோம். வாரம் முழுக்க வகுப்புகள் இருந்தாலும் வாரத்தில் ஒரு நாள் வரும் விளையாட்டு பிரிவேளை எவ்வளவு உற்சாகம் தரும். நாமும் எவ்வளவு குதூகலம் கொள்வோம்.

அதே நேரம் ஒரு பிடிக்காத பாடவேளையில் நாம் அவ்வளவு சங்கடத்தோடு வகுப்பறையில் அமர்ந்திருப்போம். மனமும் சோர்ந்து இருக்கும். விளையாட்டு என்றல் துள்ளிக்குதித்து முன்னனில் இருக்கும் நமது மனது தேர்வு என்றால் நிச்சயம் உற்சாகம் இழக்கும். அதுவும் திடீரென்று ஒரு ஆசிரியர் அவருடைய வகுப்பு நேரத்தில் சிறுதேர்வு (test) வைத்தால் நமக்கு மிகவும் கசக்கும். என்னெனில் நாம் அனைவரும் தேர்வை என்றைக்கும் ரசித்து ருசித்து செய்வதில்லையே.

நமக்கு பிடித்த ஒரு விஷயத்தை செய்யும்போது நாம் மிகச்சுலபமாக ஆபத்துக்களையும், சோதனைகளையும் எதிர்கொள்ளும் மனநிலை பெறுகிறோம். எடிசனைப் பாருங்கள். எந்தனை, எத்தனை முயற்சிகள்! எவ்வளவோ தோல்விகள்... எப்படி இருந்தால் என்ன தன்னுடைய குறிக்கோளை விடாப்படியாக மனதில் கொண்டு மிகவும் ரசித்து தன்னுடைய சோதனைச்சாலையில் தன்னுடைய சாதனை முயற்சிகளை தொடர்ந்ததால் வெற்றிக்கனிகளை பறித்தார்.

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது ஒரு வகை வெற்றி என்றால்,
விழுந்த போதெல்லாம் பலமடங்கு சக்தியுடன்எழுந்தான் என்றால், அது மிகப் பெரிய வெற்றி.

அந்த வெற்றிக்கு தேவையான சக்தியை கொடுப்பதில் இந்த ரசனைக்கு (Passion) மிகப் பெரிய பங்கு உண்டு.

இந்த வேலை ரொம்ப கஷ்டமா இருக்கு! இது தெரிஞ்சிருந்தா, இந்த வேலைக்கே வந்திருக்க மாட்டேன். அவனை மாதிரி அரசாங்க வேலைக்கு போயிருப்பேன் என்று நம்மில் பலர் சொல்லக்கேட்டு இருப்போம். அதே நிலையில் தான் அரசாங்க வேலையில் இருப்பவரும் இருப்பார். தன்னுடைய கஷ்டத்தைச் சொல்வார். ஆக, ஒன்னு  மட்டும் உண்மை. எல்லாருமே அவரவர் வேலையில் கஷ்டம் என புலம்புவார்கள்.

ஒரு சின்ன ஜென் கதை..

ஜப்பான் நாட்டில் ஒரு தாயும் சின்ன வயசு மகனும் மட்டும் வசித்த வீடு அது. ஏழைக்குடும்பம். வீட்டுத் தலைவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தற்போது நிலையில் தாயும் உடல்நிலை சரியில்லாமல் மரணத்தருவாயில் இருந்தார்.

அவளிடம் அந்த சின்னஞ்சிறு மகன் வந்து “அம்மா நீயும் என்னைவிட்டுப் போயிடாதே. நான் அனாதையாகிடுவேன் என்று சொல்லி அவளது கைகளைப் பிடித்து அழுதான். அதற்க்கு அந்த தாய் சொன்னாள், “மகனே! எந்தச் சூழ்நிலையிலும் கலக்கம் கூடாது. நம் நாட்டில் ஹிரோஷிமாவும், நாகசாகியும் எத்தனை அநாதைகளை உருவாக்கியது தெரியுமா? அவர்களெல்லாம் வாழாமலா போய்விட்டார்கள்?

ஒன்றை மட்டும் புரிந்து கொள்! உன் தந்தை அடிக்கடி என்னிடம் ஒரு விஷயத்தைச் சொல்வார். அதையே உனக்கு நான் சொல்கிறேன், என்ற தாயிடம், அந்த துயரமான சூழ்நிலையையும் மறந்து, அவள் சொல்வதைக் கேட்க ஆர்வமானான் மகன்.

“மகனே! நீ ஒருகலைஞனாகி விடு. பிழைத்துக் கொள்வாய். அதற்காக, பெரிய கலைஞன் ஆக வேண்டும் என சொல்லவில்லை. உனக்குகழிவறை சுத்தம் செய்யும் பணி கிடைத்தால் கூட அதையும் கூட கலை போலக் கருதி ரசித்து செய். நீ சுத்தம் செய்வது போல், வேறு யாரும் அதை சுத்தம் செய்ய முடியாதபடி இருக்க வேண்டும். உன் வேலையில் ஒரு தனித்துவம் வெளிப்பட வேண்டும் என்றாள். 

ஆம்... வேலையை ரசித்து, விருப்பத்துடன் செய்யுங்கள்... எந்த வெறுப்பும் கடினமும் இருக்காது.

ரசனையோடு வாழ்வோம் ஒவ்வொரு மணித்துளியும்....... வாழ்க்கையை கொண்டாடுவோம் ரசனையோடு!!

இனிய வணக்கங்கள்.... அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.







வெள்ளி, 25 மார்ச், 2016

** எங்கே போகிறோம் **



எங்கே போகிறோம்
எந்த திசையில் போகிறோம்
எதற்காக போகிறோம்
ஏதும் அறியா நீண்ட பயணம்..

இலக்கில்லா பயணமாய்
நீள்கிறது மண்ணில் நமது பாதை..
திசையறியாது காற்றாய் கடக்கிறது
நமது வாழ்க்கை..

காலவெளி எங்கும் கால்பதிக்க
இருக்கும் காலடியில்
குழிதோண்டி பயணிக்கிறது மனிதம்..

இயற்கையின் கொடையினை
சுயநல செயலால் சுடுகாடாக
மாற்றி பயணிக்கிறது மனிதம்..

ஒரு விதையையும் உருவாக
நாதியில்லா மனிதம் தான்
மரபுகளை மாற்றுகிறது...

மண்ணை படைத்திட வழியில்லா
மனிதம் தான் நெகிழியால்
மண்ணின் குரல்வளை நெரிக்கிறது..

ஒரு சொட்டு நீரையும்
உருவாக முடியாத மனிதம் தான்
உலகின் நாடி நரம்பாம்
ஆறுகளை அறுக்கிறது..

காணும் இடமெல்லாம்
மாசுக்களை தூவிவிட்டு
முகத்திரையோடு பயணிக்கிறது..

வாழ்ந்திட மற்றதை சார்ந்தே
இருப்பது மண்ணின் தத்துவமே..
தான் பிழைத்திட எல்லாம்
அழித்திட நினைப்பது
மனிதனின் சாத்திரமே..

உறுதி

மனதிருக்கு..
மனதில் உறுதியிருக்கு.
உயிரிருக்கு..
உயிரில் உணர்விருக்கு
காலென்ன போனாலென்ன..
காலனே வந்தாலென்ன

“கையிருக்கு
தன்னம்பிக்கை இருக்கு..
உதட்டில் புன்னகை இருக்கு..
உள்ளத்தில் நம்பிக்கை இருக்கு..

அறிவியலின் துணையிருக்க
அறிந்தவரின் துணையிருக்க
உள்ளத்திலே துணிவிருக்க
காலென்ன போனாலென்ன..
காலனே வந்தாலென்ன....

புதன், 23 மார்ச், 2016

*உன்னோடு பேச வேண்டும்*...



அன்பாய் இரு..
ஆதரவாய் இரு..
உண்மையாய் இரு
எல்லோரையும் அணைத்து
அனுசரித்து இரு..
பணத்தின் பின் செல்லாது
பண்பாய் இரு.
சுயநலம் தவிர்த்து பிறர்க்கு
உதவியாய் இரு...

என் உள்ளத்தில் நேரிடையாய்
போதிக்காமல்
மற்றவர்களிடம் என்னை உயர்த்தி
என் உள்ளத்தை செதுக்கி
இன்று உலகத்தோடு ஒட்டாத ஒருயிராய்...
என்னை தனிமையில் விட்டுச்சென்றயே..
அப்பா..

தவிக்கிறேன் நான்..
சூதும் தெரியவில்லை
சூழ்ச்சியும் தெரிவில்லை..
ஏய்ப்பதும் அறியவில்லை..
நல்லது என்ற கண்கொண்டு
நரிகளையும் அறியவில்லை..

எண்ணத்தில் நல்லது கொண்டு
எடுத்தது எல்லாம் வீழ்ச்சி என்றால்
எவ்வளவு தான் தாங்கும் உள்ளம்...

ஒருவேளை..
கள்ளத்தை அறிந்திருந்தால்
கலங்கியிருக்க மாட்டேனோ..
ஏமாற்ற தெரிந்திருந்தால்
இதை எழுதியிருக்க மாட்டேனோ..

இன்னும் எத்தனைக்காலம்
இந்த வேதனைகள் உள்ளத்தில்..
கலக்கம் வருகையிலே கலங்குது
என் கண்கள் அப்பா..

கண்ணீர் வரிகளை தான்
இன்னும் கட்டிக்கொண்டு வருகிறேன்...
அமைதியின் வாழ்வினிலே
அன்பின் வரிகளை என்று
அறுவடை செய்வேனோ..

செவ்வாய், 22 மார்ச், 2016

** நீரைத் தேடி **



வாழ்வெனும் கடலில்
நான் அன்பெனும்
நீரைத் தேடி
அலைகிறேன்..

அதுவோ சிலநேரங்களில்
கானல் நீராய் சாபத்தில்
என்னைத்தள்ளி
தாகத்தில் தவிக்கவிடுகிறது..

நான் கற்பூரமாய் காற்றில்
கரைய யத்தனித்த போது
பேரலையாய் வந்து
என்னை களவாடியது..

அன்புக்காக அலைபாய்ந்த போது
என்னை மெல்ல வந்து
சாரல் நீராய் தழுவியது..

பசித்திருந்த வேளையிலே
படைத்திடும் அருசுவையிலே
முகிழ்த்திடும் உமிழ்நீராய் சுவைத்து..

துயரத்தில் வீழ்ந்திருக்க
காதலெனும் பூத்தொடுத்து
மடிதனிலே தாலாட்டு
ஆனந்த கண்ணீராய் ஆட்கொண்டது..

நீ இல்லாத உலகத்திலே

நீ இல்லாத உலகத்திலே
யார் தான் இருப்பார்..

தன்னை பற்றி அறியாதவரும்
உன்னைப்பற்றி அறியாது
நொடியும் உன்னை விட்டு பிரியார்..

கண்ணுக்கு தெரிவதில்லை..
ஆனால் நீ உயிராய்...

உணர்ந்து உன்னை அறியலாம்
உணர்சியாய்...

பேச்சியில் உன்னை சொல்லலாம்
வார்த்தையாய்...

உன் ராகத்தில் தலையாட்டும்
வாழும் மரங்கள்..

உன்னில் மிதந்த வரும்
இயற்கையின் இசைகள்..

நீ பிரிய இங்கு யார் வாழ்வார்..
உயிரோடு உயிராய் வாழ்கிறாய்..

உன்னை காற்றென்பதா..
உயிர் மூச்சென்பதா?

சனி, 19 மார்ச், 2016

அர்த்தநாரி வாரிசுகள்..

மீட்டப்படாத வீணையில்
மீட்கப்படாது கிடக்கும் ராகங்கள்... ..
சொல்லொன்னா துயரத்தில்
சொல்லபடாத வார்த்தை நாங்கள்
அழகான பூஞ்சோலையில்
பூக்காத பூக்கள் நாங்கள்..
ஓளிவீசும் வெளிச்சத்தில்
நிழல் உருவம் நாங்கள்..
இசைக்காத ராகத்தை மெல்ல
பாடிடும் பறவைகள் நாங்கள்...
கடவுள் வரைந்திட்ட ஓவியத்தில்
மணமில்லா மலர் நாங்கள்..
உயிரிருந்தும் ஒரு உயிர் கொடுக்கும்
உயிரில்லா உடல் நாங்கள்..
வார்த்தைகள் கனலாய் பொசுக்கினாலும்
வாழத்துடிக்கும் இருமன உள்ளங்கள்..
எங்களுக்கும் உரிமையுண்டு
நாங்களும் கடவுளின்
கனவுப் படைப்புகளே..
அர்த்தங்களை சொல்லி ஒரு
அர்த்தநாரியாய் இருபவனும்

ஒரு அர்த்தத்தை வழங்கிடுவான்...
ஏனோ போராட்ட வாழ்க்கையிலே
வாழ்ந்திடத்தான் நினைக்கின்றோம் ..
ஆனாலும் மனம் விரும்பவில்லை
உயிருடன் இருப்பதை..!

யாத்திரை..

முடியாத நெடும்பயணமாய் தொடர்கிறது
நம் யாத்திரை..

கருவறையில் சிறு புள்ளியாய்
உயிர் துளைத்து மெல்ல
தொடங்கிய யாத்திரை..
சிறுபிறையாய் வளரும்
வானத்து நிலவுபோல
தொடர்ந்த யாத்திரை..

காடுமலை தாண்டி
தடைகளை உடைத்து..
சிற்பல தடைகளில் வளைந்து..
மெல்ல தவழ்ந்துவரும்
நதியாய் வந்த யாத்திரை..

மலர்மதுவில் மயங்கிய
பூநக்கி போல்மயங்கி
அன்பின் அகழியில் ஆட்பட்ட
சிற்றுயிராய் சுழன்று...
சிற்றிரும்பில் சிறைபட்ட
பாசக்களிறாய். பரிதவித்து
தொடரும் யாத்திரை..

பாகினில் மூழ்கித் தத்தாளிக்கும்
சிறுஎரும்பாய் இங்கே
காதலில் மூழ்கி
காமத்தில் விழுந்து
கண்டெடுத்த முத்துக்களோடு
கரையேற முடியாது தத்தளிப்பில்
தவிக்கும் யாத்திரை..

வந்தவழி அறிந்தோம்....
வாழும்வழி கண்டோம்....
அன்புவழி மறந்தோம்.....
அவதியிலே வாழ்கின்றோம்.
செல்லும்வழி சொல்லுவது
ஓங்கார ஒலியாகும்..
ஆங்காரம் விட்டு நாமும்
அமைதியாய் தொடர்வோம்

நாம் அகிலத்தின் யாத்திரையை..

சினேகிதனே சினேகிதனே

சினேகிதனே சினேகிதனே
ரகசிய சினேகிதனே
சின்ன சின்னதாய் கோரிக்கைகள்
செவி கொடு சினேகிதனே

உந்தன் பார்வை அணைக்கும்..
உந்தன் அன்பு இனிக்கும்..
நெஞ்சம் பேசும் வார்த்தைகள்
என்றும் தொடருமடா..

சொல்லிச்செல்லும் உந்தன் வார்த்தை கவரும்..
உன் சிரிப்பொலி எந்தன் உயிர் கிளரும்..
உன்னிதழ் மொழி சுவைக்கும்..

காத்திருக்கும் நேரம் தன்னில் கறைவேன்..
நீ பார்த்திருக்க நானும் கொஞ்சம் உறைவேன்..
உள்ளத்திலே மகிழ்வேன்..

கூந்தலை நுகர்ந்து விரல்கோலம் போட்டு..
உன்னுயிர் கலந்திடுவேன்..
நேரத்தை நிறுத்தி உன்துயர் துரத்தி
என்னுயிர் பிழைத்திடுவேன்..

எண்ணங்களை உன்னுடனே பகிர்வேன்..
வண்ணங்களை கலந்து வானவில்
வரைந்து உனக்கென நான் தருவேன்..

உன்வார்த்தைகள் கோர்த்து...
வரிகளாய் சேர்ந்து....
உனக்கென பாடிடுவேன்..

தினம் எழும்போது உன்முகம் பார்த்து..
உள்ளுக்குள்ளே நனைந்து கொள்வேன்..
நீவரும் பாதை நினைவுகள் விதைத்து

என் காதலை வளர்த்து வைப்பேன்..

வெள்ளி, 18 மார்ச், 2016

12. பதற்றம் தவிர்ப்போம்..

வலைவீசும் எண்ணங்கள்

12. பதற்றம் தவிர்ப்போம்..

பதற்றம் நம்  வாழ்க்கையில் பலநேரங்களில் தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்கிவிடுவதை நாமே அனுபவித்திருப்போம். அந்த பதற்றம் பற்றி கொஞ்சம் பதற்றமில்லாமல் இந்த வாரம் வலைவீசி  பார்ப்போம்..

முதலில் மறைந்த திரு. தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் சின்ன கதையை அப்படியே பகிர்கிறேன்..

அது ஒரு பள்ளிக்கூடம். ஆசிரியர் வகுப்பில் நுழைகிறார்.

மாணவர்கள் எழுந்து நிற்கிறார்கள். அவர்களை அமரச் சொல்லிக் கையமர்த்திவிட்டு, கரும்பலகையில் எழுத ஆரம்பிக்கிறார்.

3 & 6 & 12.    இப்படி மூன்று எண்களை எழுதிவிட்டு மாணவர்கள் பக்கம் திரும்புகிறார். கேட்கிறார். ‘‘மாணவர்களே... இதன் தீர்வு...’’

அவசரக்குடுக்கையான ஒரு மாணவன் எழுந்து நிற்கிறான். ‘‘ஐயா..! இது ஏறுமுகம்... ஆகவே அடுத்த எண் 24... இதுதான் விடை!’’

‘‘இல்லை!’’ என்கிறார் ஆசிரியர். அடுத்து ஒரு மாணவி எழுந்து நிற்கிறாள். ‘‘ஐயா! அந்த மூன்று எண்களையும் கூட்டினால் 21. அதுதான் விடை!’’ ‘‘இல்லை இல்லை!’’  மாணவர்கள் விழிக்கிறார்கள். இப்போது ஆசிரியர் விளக்குகிறார்.

‘‘மாணவர்களே. நான் எந்தக் கணக்கையும் இன்னும் போடவில்லை. அதற்குள் விடை காண அவசரப்படுகிறீர்கள். இயல்பாக எனக்குத் தோன்றிய மூன்று எண்களைத்தான் கரும்பலகையில் எழுதினேன். மற்றபடி நான் இப்போது எழுதியதற்குத் தீர்வு என்று எதுவும் இல்லை.’’ தெளிவான மாணவர்கள் தலையசைத்து ஒப்புக்கொண்டார்கள். ஆசிரியர் மறுபடி ஆரம்பித்தார்.

‘‘இப்போது மறுபடியும் முயல்வோம்...’’ என்று சொல்லிவிட்டு, கரும்பலகையில் எழுதினார்: 22 58 33 55.  உடனே மாணவர்கள் சந்தேகத்துடன் கேட்டார்கள்.

‘‘சார், இதன் தீர்வு என்ன?’’ ஆசிரியர் சிரித்துக் கொண்டே சொன்னார். ‘‘இதற்கான தீர்வை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால், இது என் வீட்டு டெலிபோன் நம்பர்!’’  மாணவர்கள் அமைதியானார்கள்.

ஆசிரியர் பேச ஆரம்பித்தார். ‘‘மாணவர்களே! இந்த இரண்டு கணக்குகள் மூலமாகவும் உங்களுக்கு இரண்டு பாடங்கள் போதிக்க விரும்புகிறேன்.
உங்களுக்கு என்னுடைய முதல் அறிவுரை: “கற்பனையான பிரச்னைகளுக்கு அநாவசியமாக பதற்றம் ஆகாதீர்கள்.

இரண்டாவது அறிவுரை: “எப்போதும் கொஞ்சம் இயல்பாக இருங்கள்.

நண்பர்களே! இந்த அறிவுரை மாணவர்களுக்காக மட்டும் அல்ல. எல்லா மனிதர்களுக்காகவும் தான். இன்றைய மனிதன் கற்பனையான பிரச்னைகளிலேயே அதிகம் கலங்கிப் போகிறான். அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்த பிறகு அல்லல் படுகிறான்.

பதற்றம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. உண்மையில் பதற்றம் என்பது ஒரு மனநோயன்று. ஆனால் அதை தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகி விடக்கூடும் என்கின்றனர் உளவியலாளர்கள்.
.
நாம் மிக அதிகமாக கோபப்படும் போதும், உணர்ச்சிகரமான நிகழ்வுகளின் போதும், அவரச அவரசமாக நம்முடைய செயல்களை செய்யும்போதும் பதற்றம் உருவாகிறது.

ஆனால் இந்த கோபத்தினாலோ, உணர்ச்சிப்பெருக்கினாலோ, அவரசத்தினாலோ நாம் எதையும் சாதிக்கப்போவதில்லை, சாதிக்கவும் முடியாது. அப்படி இருக்கும்போது எதற்கு இந்த தேவையற்ற பதற்றம்.

ஒரு சிலருக்கு பிறரிடம் சகஜமாக பேச முடியாது. வேறு யாரவது நெருக்கி வந்து பேசினால் உடனே பதற்றம் தொற்றிக்கொள்ளும். இந்த பழக்கத்தை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இது குழந்தைப் படுவத்திலேயே ஆரம்பமாகும் ஒரு கெட்டகுணமாகும். இதை வளர விட்டால் படிப்பில் சந்தேகம் வந்தால்கூட ஆசிரியரிடம் கேட்டு தெளிவு பெறமுடியாத அளவு பயத்தை உண்டாக்கிவிடும். ஒரு பாலினத்தினர் எதிர் பாலினத்தினருடன் ஒரு சகஜமான நட்பை பரிமாற இந்த பதற்றம் தடை உண்டாக்கும். கல்வி முடித்து வேலைக்கு செல்லும் போது நேர்முகத்தேர்வுகளில் தோல்வியை தரும் சூழலை இந்த பதற்றம் உண்டாக்கும். குழு நடவடிக்கையை தவிர்க்க தூண்டும். இந்த பதற்றம் நமது முன்னேற்றத்தின் தடைக்கற்களில் ஒன்று  ஆகும்.

இந்த பதற்றமான மனநிலை உடையவர்கள், தாழ்வு மனப்பான்மைக்குள் எளிதில் விழுந்து மனச்சோர்விற்கு ஆளாகும் வாய்ப்பும் அதிகம் இருக்கிறது.

நமது எண்ணங்கள்  தான் நமது வாழ்வின் அடிப்படையாக அமைகிறது. நேர்மறை எண்ணங்கள் நமக்கு நற்பலனையும், எதிர்மறை எண்ணங்கள் பதற்றமான நிலையில் தோல்வியையும் உண்டாக்குகின்றன. தவறுசெய்துவிடுவோமோ என்ற அச்சத்துடன் செய்யும் வேலைகள் தவறாகவேதான் முடியும். எனவே எதிர்மறையான சிந்தனைகள் (Negetive Thinking) தோன்றும்பொழுது கவனமாக உங்கள் மனத்தை வேறு நேர்மறை எண்ணங்களுக்குத் (Positive Thinking) திருப்புங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்றாலும் கொஞ்ச நாளில் உங்கள் மனமானது தானாகவே நேர்மறைக்கு மாறிவிடக் காண்பீர்கள்.
நாம் அனைவரிடமும் எதாவது ஒரு சிறப்பு திறமை இருக்கும். என்றைக்கும் நமக்கு எந்த திறமையும் இல்லை என்று தாழ்த்தி எண்ணாதிருங்கள். 'எறும்பும் தன் கையால் எட்டுச் சாண்' என்பார் அவ்வைப்பிராட்டி.
நீங்கள் என்னென்ன செய்ய விரும்புகிறீர்கள் அல்லது வாழ்வில் உங்கள் இலக்கு என்ன? இதைச் சற்று ஆழ யோசியுங்கள். இந்தப் பதற்றம் அதற்கு எந்த வகையில் தடையாக இருக்கும் என்பதைச் சிந்தித்து, "இதில் இருந்து நான் வெளியில் வந்தே தீருவேன். என் இலக்கை அடைந்தே தீருவேன்" என்று இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் உரக்கச் சொல்லிக்கொள்ளுங்கள்.
காலை எழுந்தவுடன் கண்ணில் படுகின்ற மாதிரியான இடத்தில், நல்ல ஆரோக்கியமான பொன்மொழிகள், உற்சாகமூட்டும் சுவரொட்டிகள் இவை இருக்குமாறு ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். இரவு படுக்கைக்குச் செல்லுமுன், சிறியதோ பெரியதோ,உங்களுக்கு நடந்த நன்மை ஒன்றை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.
தனிமையை தவிருங்கள். அப்படி இருந்தால் ஏதாவது செய்துகொண்டு இருங்கள். 'Idle man's brain is devil's workshop' என்பது ஆங்கிலப்பழமொழி. தனியாக இருக்கையிலும், வேலையில்லாமல் இருக்கையிலும் நமது மனக்குரங்கு பல கிளைகளில் தாவித்தாவிச் செல்லும். அவ்வாறு அக்குரங்கு தாவும் பல நினைவுக்கிளைகள் எதிர்மறையானதாக இருக்கும். எனவே மனத்தை அலைபாய விடாமல் ஒரு நிலைப்படுத்தவேண்டுமானால் உடலுக்கும் மனதிற்கும் வேலைகொடுத்துக்கொண்டே இருப்பது அவசியம்.
உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களில் யார் உங்கள் நம்பிக்கைக்குரியவரோ அவரிடம் உங்கள் மனத்தில் உள்ள சுமைகளை, சந்தேகங்களை, பயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். புதியவர்களுடன் பழக நேர்ந்தால் எப்படிப்பழகுவது, ஒரு குழுவில் பேசுவது எப்படி என்றெல்லாம் அவருடன் சேர்ந்து பயிற்சி செய்து பாருங்கள். நீங்கள் புதிய இடத்தில் பலருடன் கலகலப்பாகப் பழகுவது, பொது இடத்தில் தைரியமாக உரையாடுவது, ஆய்வரங்கில் கலந்து கொள்வது இவை போல நேர்மறையாகக் கற்பனை செய்து பாருங்கள். இவையெல்லாம்பதற்றத்தை தணிக்க உதவும் வழிகள்.
தண்ணீரில் இறங்காமல் கரையில் நிற்கும்வரை நீச்சல் பழகுவது என்பது முடியாது.
இறுதியாக இராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள் உரைத்த கதை.. பக்தியில் சிறந்தவர் யாரென ஒருமுறை நாரதர் திருமாலிடம் வினவினார்.. ஓர் ஏழைக் குடியானவனைக் காண்பித்து "இவனே என் பரம பக்தன்" என உரைத்தார்

திருமால். "அல்லும் பகலும் இடையறாது "நாராயணா" என உன் திருநாமத்தைச் செப்பும் என்னை விட இந்த ஏழைக் குடியானவன் எவ்வகையில் உயர்த்தியானவன்?" என நாரதர் வினவ திருமால் புன்னகை பூத்தவாறே "நீ சென்று அவனது அன்றாட நடவடிக்கைகளை ஒருநாள் மட்டும் கவனித்து வா" என்று அனுப்பி வைத்தார். நாரதரும் சென்று கவனித்தார்.

அக்குடியானவன் காலையில் எழுந்தான் "ஸ்ரீ ஹரி" என்றான்.. தனது காலைக் கடன்களை முடித்தான்.. கலப்பையை எடுத்துக் கொண்டு வயலுக்குச் சென்றான். வழக்கம்போல் வேலைகளைச் செய்தான்.. மாலை இல்லம் திரும்பினான்..குளித்தான். தன் மனைவி மக்களோடு உரையாடினான். ஆட்டங்கள் ஆடி மகிழ்ந்தான். இரவு படுக்கையில் படுக்கச் சென்றான். "ஸ்ரீ ஹரி" என்றான். உறங்கிவிட்டான்..

இது நாரதர் கவனித்த தினத்தில் நிகழ்ந்தது. திருமாலிடம் திரும்பிய நாரதர் இதை உரைத்தார். திருமாலும் சிரித்தவாறே "இன்றல்ல நாரதா.என்றுமே அவனது வழக்கமான செயல்கள் இவைதான்" என்றுரைத்தார்.. "பின்னர் எப்படி அவனைத் தங்களது பரமபக்தன் என்று உரைத்தீர்கள்?" என நாரதர் வினவினர்.

பகவான் நாரதன் கையில் ஒரு எண்ணெய் நிரம்பிய கிண்ணத்தைக் கொடுத்து, "நாரதா. இந்த பாத்திரத்தைக் கையில் வைத்துக் கொண்டு இதில் உள்ள எண்ணெய் ஒரு சொட்டளவும் சிந்தாமல் இந்த வைகுண்டத்தை ஒரு முறை சுற்றி வா. பிறகு பதிலுரைக்கிறேன்" என்றார். நாரதரும் சுற்றி வந்தார்.

"பாருங்கள் பகவானே..ஒரு சொட்டளவும் சிந்தவில்லை.. தங்கள் ஆணையை அப்படியே நிறைவேற்றி விட்டேன். இப்போது சொல்லுங்கள் யார் பக்தியில் சிறந்தவரென்று?" என பகவானிடம் வினவினார் ..பகவான் "நாரதா.. இந்த வைகுண்டத்தைச் சுற்றி வருகையில் எத்தனை முறை என்னை நினைத்தாய்? எத்தனை முறை என் நாமத்தை உரைத்தாய்?" என பதிலுக்கு ஒரு வினாவை எழுப்பினார் "அதெப்படி... என் கவனமெல்லாம் இந்த எண்ணெய் துளியளவும் சிந்திவிடக்கூடாது என்பதிலேயே இருந்தது.. அந்த பதற்றத்தில் ஒரு முறை கூட தங்களை நினைக்கவில்லை.. அதெப்படி நினைக்க இயலும்? என் கவனம் உங்கள் மேல் வந்து விட்டால் நான் பரவசமாகி விடுவேன். எண்ணெய் சிந்தியிருக்குமே?" என்று நாரதர் பதிலுரைக்க...

"இந்தச் சிறு பாத்திரத்தைச் சிந்தாமல் சுமக்கும் வேளையில் ஒரு முறை கூட நீ என்னை நினைக்கவில்லை...ஒரு முறை கூட என் திருநாமத்தைச் செப்பவில்லை. ஆனால் அவனைப் பார்.. ஏழை... அவனுக்குச் சுமைகள் பல... குழந்தைகள் பல... ஆயினும் காலை எழுந்தவுடன் ஒரு முறை... இரவில் உறங்குமுன் ஒருமுறை ... என நாளொன்றுக்கு இருமுறை என் திருநாமத்தையுரைத்து என்னை நினைக்கின்றானல்லவா? தனது இல்வாழ்க்கையெனும் பாத்திரத்தையும் அவன் ஏந்தி வந்த பொழுதும் அவனது கவனங்களெல்லாம் மனைவி, குழந்தைகள் என்றிருந்த போதும் தினமும் மறவாது என் நாமத்தை உரைக்கின்றானே...அவனல்லவா என் பரமபக்தன்" என சிரித்தவாறே உரைத்த திருமாலைக் கண்டு நாணிக் கொண்டே வெளியேறினார் நாரதர்

ஒரு வேலையை பதற்றத்துடன் செய்ததால் தான் நாரதரால் கடவுளின் நாமத்தையே சொல்ல முடியவில்லை. சாதாரண மனிதர்கள் நாம்.. பதற்றம் நம்மை என்ன  பாடுபடுத்தும்..


இனிய வணக்கங்கள்.... அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.