செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

** தூது செல்வாயோ நிலவே **

தாரகைகள் பின்னொளிர..
முகம்காட்டும் வெண்ணிலவே..
என்மனம் கொண்ட எண்ணங்களை
சுமந்து தூது செல்வாயோ நிலவே..

வேற்றுமைகள் சிதறிக்கிடக்கும்
மாறுபட்ட உலகத்திலே
எல்லோருக்கும் பொதுவென
நிறைந்திருப்பது நீதானே!!!!

ஆயிரமாயிரம் சந்ததிகள்
வந்துபோயின உன் காலடியில்
அனைத்தும் பார்த்தது நீ

துரோகத்தின் எல்லைகளையும்
கண்டிருப்பாய்..
காதலின் ஆழத்தையும்
உணர்ந்திருப்பாய்..

கொடூர உள்ளத்தின் கோரங்களையும்
கூடவே அன்பின் ஆர்ப்பரிப்பையும்  
நிதம்  நீ பார்க்கின்றாய்..

என் உள்ளத்தின் உணர்வுகளை
மாற்றாமல் கொண்டு செல்ல
உன்னையன்றி தூது செல்ல
சிறந்தவர் யாருளர்?

செல்.. நிலவே..
இந்த உலகமெங்கும் செல்..
இதோ உள்ளங்களில் உறைந்து கிடக்கும்
அன்பை உன்னில் சுமந்து செல்..

என்னின் அன்பானவர்களுக்கு 
என் அன்பை அள்ளிக்கொடு..

என்னின் இரக்கமானவர்களுக்கு
என் அன்பை பரிசாகக் கொடு..

என்னை ஏமாற்றியோர்க்கும் ஏற்றம் தர
அன்பைக்கொடு..

எந்தன் எதிரிகளுக்கு இன்பம் தர
என் கனிவின் அன்பைக்கொடு..
அப்படியே அதில் கொஞ்சம் அன்பை..
என் துரோகிகளுக்கும் தந்துவிடு..

செல்.. நிலவே..
இந்த உலகமெங்கும் செல்..
இதோ உள்ளங்களில் உறைந்து கிடக்கும்

அன்பை உன்னில் சுமந்து செல்..

கருத்துகள் இல்லை: