வெள்ளி, 11 டிசம்பர், 2015

பாரதீ

பாரதீ

வேள்வித்தீ வளர்க்கும்
குடியில் வந்து மனதில்
ஞானத்தீயோடு
எங்கள் வாழ்வின் நிலையை மாற்ற
உள்ளத் தீயை
வளர்த்த முண்டாசுக் கவியே...!

"காலா! உனைநான்சிறு புல்லென
மதிக்கின்றேன்: என்றன்
காலருகே வாடா! சற்றேஉனை மிதிக்கின்றேன்"
என்று சொல்லியே
காலனை வென்றிட்ட பாரதீ
இன்றும் வாழ்கின்றாய்.
வாழிய நீயே...

"அசைவறு மதிகேட்டு"
சங்கத்தமிழுக்கு வாழ்வளித்தாய்..

கேளீர் கேளீர் என்றே கூவியழைத்து
எங்கள் சினத்தை வென்றிட சொல்லி
மேதினியில்
மரணமில்லா வாழ்விற்கு
வழி சொன்ன பாரதீ...
நீயே
ரௌத்திரம் பழகச்சொல்லி
நீசரின் அக்கிரமத்தை அழிக்கச்சொன்னீர்..

அகத்தே கறுத்து
புறத்தே வெளுத்த
உலகரை திருத்த வழிபல
கண்ட அமரகவியே...

"நூறுவயது புகழுடன் வாழ்ந்துயர்
நோக்கங்கள் பெற்றிட வேண்டும் என்றே
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
ஓம்சக்தி என்றுரை செய்திடுவோம்"
என்று நீ பாடிய வரிகள்
எங்கள் மனதில் படிந்துள்ளதடா பாரதீ

நீயும் ஊனுடம்பு விட்டு என்றுமழியா
புகழுடம்புடன் நூற்றாண்டு கடந்தும்
இந்த வானகவையகம் உள்ளமட்டும்
வாழும் வரம் பெற்றாயாடா...

சாத்திரங்கள் சொல்லும் பொய்களை
சடுதியில் நம்பா நாயகனே...!

"மெள்ளப் பலதெய்வம் கூட்டிவளர்த்து
வெறுங்கதைகள் சேர்த்துப்-பல
கள்ளமதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ?...."

என்றே கோபத்தை உமிழ்ந்து நீயும்

"ஆயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுன்
டாமெனில் கேளீரோ?" வென
சுத்தஅறிவே சிவமென
மெய்யுண்ர்ந்தவர் நீரல்லவோ...

கடவுளின் கற்பனைக்கொண்டே வரும்
பற்பல சண்டைகள் அறிந்த நீயோ..

"தெய்வம் பலபல சொல்லிப்-பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்
உய்வ தனைத்திலும் ஒன்றாய்-எங்கும்
ஓர்பொரு ளானது தெய்வம்"
என்று ஓங்கியுரைத்தாய் நீயும்..

கேளார் இந்த கேடுகெட்ட மானுடர்
இன்றும் தெய்வத்தின் பேரில் சண்டை
எங்கும் சாத்திர மூட்டை கொண்டே
சடுதியில் மண்டை உடைகின்றார்..
வாராய் நீயும் மீண்டும் இந்த
மானுடர் தேறிட
மனம் மாறிட.. வளம் கண்டிட..

"தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னை
தீண்டும் இன்பந் தோன்றுதடா நந்தலாலா.."
எண்று தேவனைக்கண்டிட பாரதீ..

"மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டுகள், மரங்கள்"
என்று எவ்வுயிரும் பேதமின்றி
இன்புற்று வாழ வேண்டுவது
உந்தன் உத்தம உள்ளமடா...

"தெள்ளுற்ற தீந்தமிழின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக்கண்டார்"
என்றே நம் கன்னித்தமிழுக்கு சிறப்புத்தந்தாய்..

ஞானரதத்தில் உலாவந்து
இங்குவாழும் மக்களின் மூடமனத்தினை
திறக்கச்செய்தாய்...

"நாலுகுலங்கள் அமைத்தான்-அதை
நாசமுறப்புரிந்தனர் மூடமனிதர்"
என்றே சாதியதிற்கு தீ வைத்த
சரித்திர நாயகனே...

"எல்லோரும் ஓர் நிறை
 எல்லோரும் ஓர் விலை
 எல்லோரும் ஓர் நிலை"
என்றே சமத்துவம் விதைத்தாய்..

"காதல் காதல் காதல்
காதல் போயிற் காதல் போயிற்
சாதல் சாதல் சாதல்"
என்று குயில் பாட்டில் கூவி நீயும்
காதலுக்கு புதுவரிகள் சொன்னாய்...

வாழ்ந்திட்ட காலத்தில் வறுமையக்னி
உன் வீட்டு அடுப்பினில் ஆட
நீயோ... அந்த அக்கினி குஞ்சை கொண்டு
காட்டிடை வைத்தே..
வெந்து தனிந்ததுகாடு
என்று எக்காலமிட்டே களிப்புற்றீர்..

உன்னினைவுகள் என்றும் எங்களின்
நெஞ்சினில் நீங்கா..
நீ பாடிய வரிகளும் என்றும் அழியாது
இந்தவுலகு வாழும் காலமட்டும்..

வாழிய வாழிய வாழியவே..


கருத்துகள் இல்லை: