திங்கள், 10 ஜூலை, 2017

கனவு

அந்த தருணங்கள் நன்றாகவே இருந்தது..
எண்ணியது எல்லாம் ஏமாற்றம் இல்லாமல்
நன்றாகவே இருந்தது..
நானே என் எண்ணங்களின் ஆளுமையாகவும்
நானே என் எண்ணங்களின் சேவகனாகவும்
நானே என் எண்ணங்களின் அடிமையாகவும்
புதிய அனுபவத்தில் நான் புதியவனானேன்
காலக்கெடு இல்லாத செயல்களும்
குற்றங்கள் சொல்லாத பார்வையாளர்களும்
அவசரத்தின் ஓட்டத்தில்…….
பிறரின் எண்ணங்களுக்கு மண்டியிட்டு
என்னைத் தொலைத்தும் சுயமிழந்தும்
என்னைச் சுருக்கியும் குறுக்கியும்
வாழ்ந்த நாட்களை போலல்லாமல்
இது வேறுபட்டிருந்தது...
யாரோடும் பேசுவதற்கு யோசித்து
வார்த்தைகள் தேடவேண்டிய
அவசியமில்லாமல் போனது..
காலவெளி தாண்டிய பயணமாய் அது இருந்தது
அடிச்சுவடுகள் காணமல் போயின..
இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை
தூர நின்று வேடிக்கையும் பார்க்க முடிந்தது
எனக்கான இடங்கள் எல்லாமே
எனக்காக மட்டுமே இருந்தது
இருக்கட்டுமே..
என்னை கொஞ்சம் எழுப்பாமல் விடுங்களேன்..

இந்த கனவுகளை கொஞ்சம் ஆண்டுக்கொள்கிறேன்..

கருத்துகள் இல்லை: