சனி, 16 மே, 2015

நான் பெரிய பதிவர் எனும் அகந்தை!

மனிதர்களுக்குக்  மனக் குழப்பத்தை ஏற்படுத்தும்,

மனிதர்களை அழிவுக்கு இட்டுச்செல்லும் மிக 

முக்கியமானவை ‘நான் ’,’எனது’.


வடமொழியில் நான் என்பதை அகங்காரம் என்றும் 
எனது என்பதை மமகாரம் என்றும் குறிப்பர்.

ஒரு குட்டிக் கதை.ஒரு நாட்டில் சிறந்த ஞானி ஒருவர் 
இருந்தார் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அவரிடம் 
ஆசி பெற்றுப் பலன் அடைந்தனர்.

அவரைப்பற்றி அறிந்த அந்நாட்டு மன்னன் ஒரு நாள் 
அவரைக் காணத் தன் பரிவாரங்கள் புடை சூழ 
ஆர்ப்பாட்டமாக வந்தான்.அவன் ஞானியின் குடிலுக்குச்
 சிறிது தொலைவில் வந்தபோது, அவனைப் பார்த்த அவர், 
குடிலுக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார்.
மன்னன் மிகவும் கோபம டைந்தான்.   

குடிலின் வாசலில் நின்று சத்தம் போட்டுச் சொன்னான்”
நான் இந்த நாட்டு மன்னன் வந்திருக்கிறேன்;வெளியே 
வந்து  ஆசி வழங்குங்கள்.”

பதில் இல்லை.

மீண்டும் சொன்னான்”நான் திரிபுவனச் சக்ரவர்த்தி 
கேசரிவர்மன் வந்திருக்கிறேன்.வெளியே வந்து 
அருள் செய்யுங்கள்”

உள்ளிருந்து குரல் வந்தது”நான் செத்த பின் வா”

மன்னன் திகைத்தான்.என்ன இவ்வாறு சொல்கிறார்?
அவர் செத்த பின் எவ்வாறு ஆசி வழங்குவார்?

அமைச்சரைப் பார்த்தான்.

அந்தக்காலத்தில் அமைச்சர்கள் அறிவாளிகளாக இருந்தனர்.
நன்மை தீமையை மன்னனுக்கு எடுத்துச் சொல்பவர்களாக 
இருந்தனர்

அமைச்சர் சொன்னார்.”நீங்க நான் ,நான் என்று உங்களை 
பற்றிப் பெருமை யாகச் சொன்னீர்களல்லவா?அந்த நான் 
எனும் அகந்தை அகன்ற பின் வா என்று சொல்கிறார்”

மன்னன் தெளிவடைந்தான்.

நான் எனது என்ற எண்ணம் நிறைந்திருந்தால் மனம் 
குழம்பித்தான் இருக்கும்.

நீங்கள் உங்கள் காரில் ஏறி அமர்கிறீர்கள்.சாரதியிடம் 
சொல்கிறீர்கள், ”சாரதி,காரை தெரு முனையில் நிறுத்து”
என்று.

அப்படித்தானே சொல்வீர்கள்?

என் காரைத் தெருமுனையில் நிறுத்து என்று சொல்வீர்களா?

மாட்டீர்கள்தானே?

ஏனெனில் அதற்கு அவசியமில்லை.

ஆனால் குருட்சேத்திரப் போரில் அர்ஜுனனுக்கு இந்த மமகார 
உணர்வு ஏற்படுகிறது

சாரதியான கண்ணனைப் பார்த்து,”இரண்டு சேனைகளுக்கும் 
நடுவே என் தேரைக் கொண்டு போய் நிறுத்து” என்று 
சொல்கிறான்.

”சேனையோர் உபயோர் மத்யே ரதம் ஸ்தாபய மே அச்யுத’”

இது அவனது அகங்காரத்தை,மமகாரத்தைக் காட்டவில்லையா?

கீதை வகுப்பில் ஸ்வாமிஜியிடம் நான் இதே கேள்வியைக் 
கேட்டேன். சரியான பதில் கிடைக்கைவில்லை.

அர்ஜுனனுக்குக் குழப்பம் ஏற்பட்டதே இந்த அகந்தையால்தான்
என நான் எண்ணுகிறேன்.

நான்,எனது ரதம்,என் உறவினர்,நான் கொல்லப்போகிறேன் 
— நான்,நான்,நான்.

முடிவு குழப்பம்.

எனவே இயன்றவரை இந்த நான்,எனது என்னும் செருக்கை
விட்டொழிக்க வேண்டும்

வள்ளுவர் சொல்கிறார்-

”பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு”---347-

யான்,எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் 
கொண்டு விடாதவரை,துன்பங்களும் விடாமல் பற்றிக் 
கொள்கின்றன.


பதிவு: http://kuttikkunjan.blogspot.in/2012/09/blog-post_26.html

கருத்துகள் இல்லை: